Welcome To Literary Bookshelf
Sangam literature comprises some of the oldest extant Tamil literature, and deals with love, traditions, war, governance, trade and life.!

நெருப்புக் காடுகள்
(மரபு கவிதை தொகுதிகள்)
தென்னவன் எழுதியது

neruppuk kATukaL
(collection of short poems)
by tennavan (K. Subbaiah)




    Acknowledgements:
    Our sincere thanks go to Mr. K. Subbaiah ("tennavan) and his son Mr. Vasanth for providing
    us with a soft copy of this work and for permission to publish the work as part of Project Madurai etext collections.
    Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

    © Project Madurai, 1998-2018.
    to preparation
    of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
    are
    http://www.projectmadurai.org/

நெருப்புக் காடுகள்
(இரண்டு மரபு கவிதை தொகுதிகள்)
தென்னவன் (கே. சுப்பையா) எழுதியது

Source:
    நெருப்புக் காடுகள்
    இரண்டு மரபு கவிதை தொகுதிகள்

    1) தலைப்பு : மலர்ந்த பின்பு
    அமெரிக்கன் கல்லூரி மாணவர்களால் பதிப்பிக்கப்பட்டது
    ஆண்டு: 1972
    கவியரசு கண்ணதாசன் அவர்களால் வெளியிடப்பட்டது.

    2) தலைப்பு : நெருப்புக் காடுகள்
    தென்னவன் பதிப்பகம்
    ஆண்டு: 1982
    சொல்லின் செல்வர் குமரி அனந்தன் அவர்களால் வெளியிடப்பட்டது


நெருப்புக் காடுகள்

பொங்கல் வேண்டாம் போங்கள் !

உழுபவனை, உதிரத்தை வேர்வை ஆக்கி
        உருவாக்கும் செந்நெல்லே தெய்வம் என்று
தொழுபவனை, மாட்டோடு மாடாய்ச் சேற்றில்
        சுழல்பவனை, வெய்யோனும் விழிக்கு முன்னே
எழுபவனை, உப்பில்லாக் கூழில் இந்த
        உலகத்தைக் கண்(டு) அதுவும் சிலநாள் இன்றி
அழுபவனை, வயலோரம் துயரில் வீழ்த்தி
        ஆர்ப்பதன்பேர் திருநாளாம் ! அந்தோ பாவம் !

மட்டான விலையினிலே அரசுதந்த
        மலிவுவிலை உரம்வாங்கிப் பதுக்கி வைத்து
எட்டாத உயரத்தில் விலையை ஏற்றி
        ஏர்உழவன் வயிற்றினிலே அடித்து, மூச்சு
விட்டாலும் விலைகூடும் என்று சொல்லி
        விளையாடும் பெரும்புள்ளிக் கறுப்புச் சந்தைக்
கொட்டமின்னும் நீங்கவில்லை! உழவனுக்குக்
        கொள்ளிவைக்க அடுப்பெரித்தோம் பொங்கல் என்றே !

ஒட்டிவிட்ட உடலோடும், திரைமறைவின்
        உயர்மட்டம் கேட்கின்ற லஞ்சம் தந்து
தட்டிவிட்டால் நீர்பாய்ச்சும் ‘மோட்டார்’ காணத்
        தரும்கடனுக் கேற்பாடு செய்வ தற்காய்
வட்டிக்குக் கடன்வாங்கி விளைத்த நெல்லை
        வயல்மேட்டில் கடனுக்கே அளந்துவிட்டுப்
பட்டிக்குப் போய்அரிசி விலைக்கு வாங்கப்
        படும்பாடு கொஞ்சமில்லை ! விழாஓர் கேடா?

‘படியளக்கும் பரந்தாமன்’ – உழவன் மக்கள்
        பசியென்று கதறுகிற நிலையை மேலும்
‘குடி’ அளக்க விட்டுவிட்டுக் கூடி நின்று
        கொடிபிடித்தோம் தமிழருக்குத் திருநாள் என்று!
கொடியநிலை மாற்றிடவே உழவர் கூடிக்
        கூப்பாடு போட்டாரேல் உயிர்குடிக்கத்
தடிஎடுத்தும் துப்பாக்கி கொண்டும், தாய்மார்
        தாலியினை அறுத்தெறிந்தும் பொங்கல் கண்டோம்?

சொல்லரிய வேதனையில் வறுமை அன்றித்
        தொகையேதும் உழைப்பினிலே காணா ஏழை
கல்லறையில் கூடிநின்று கொள்ளையிட்ட
        கணக்குக்குச் சண்டையிடும் கும்பல் தன்னை
வல்லபெருஞ் சக்திகளாய்க் கொதித்தெழுந்து
        வஞ்சகரின் குருதிஒரு கடலாய் ஓட
வெல்லுகின்ற போருக்குப் பொங்கிச் சீறும்
        வேளைதான் தமிழனுக்குப் ‘பொங்கல், ஆகும்!

பொட்டென்றும் பூவென்றும் கொஞ்சி எம்மைப்
        புத்தமுதம் கொடுத்தணைத்து மடியில் போட்டுச்
சிட்டென்றும் தேனென்றும் முத்தம் கூட்டிச்
        சீராட்டித் தாலாட்டிக் காத்த தாயைக்
கட்டென்றும் குலையாத மேனி வண்ணம்
        கவின் சிந்தும் ஆருயிரைத், தமிழை, மேன்மை
விட்டென்றும் போகாமல் இமயத் தேற்றி
        வீறுகொள்ளும் நாள் தமிழர் திருநாள் ஆகும்!
-------

விருந்துக்கு மருந்து

(காக்கை கரைந்தால் விருந்து வரும் என்பது நாட்டுப்புற நம்பிக்கை. விருந்து வரக் கரைந்த காக்கைக்கு நெய்யும், சோறும் நிறைய வையெனத் தோழியிடம் சொன்னாள் தோகை ஒருத்தி. அது அன்று! ‘விருந்து வரக் கரைந்த காக்கையை மருந்து வைத்துக்கொள்’ என, வேதனைப்பட்ட ஏழை விவசாயி சொல்கிறான். அது இன்று!)
விருந்துவரக் கத்தினால் - காக்காயே
மருந்து, வைத்துக் கொல்லுவேன்!

பட்டினியில் சாகுது
        பச்சைப்புள்ளை இங்கே – அட
சட்டி, பானை ஏங்குது – விருந்தாளி
        சாப்பிடுவதெங்கே?

வானம் வறண்டு போச்சுது – எங்க
        வயிறு காயலாச்சுது !
கானம் பாடும் காக்கையே - இது
        காதில் ஈயம் பாய்ச்சுது !

பெத்துப் போட்ட பிள்ளையை – ஜனம்
        வித்துப் போடப் பாக்குது,
குத்துப்பட்ட நெஞ்சிலே – நீ
        கூரு தீட்டப் பாக்கிறே !

பயிருபச்சை கருகுது – புத்ர
        பாக்யம் மட்டும் பெருகுது – அட
கயிறு போட்டுத் தொங்கினா – பிள்ளை
        காலைச் சுத்தி வருகுது !

மாடு கண்டு வக்கலே – நாங்க
        மானம் தானே விக்கலே - இந்தக்
கேடுகெட்ட நாட்டிலே – தேர்தல்
        கேலிக்கூத்து நிக்கலே.

வேலி ஊரை மேயுது – லஞ்சம்
        வீட்டு மேல பாயுது !
பாலும் தேனும் ஓடலே - இங்கே
        பட்டைத் தண்ணி ஓடுது !

விலையும் கூட ஏறுது ! – வெறும்
        கொலையும் கொள்ளை மீறுது ! - எங்கும்
சிலைகள் வைக்கக் கூசலே – எங்க
        சிரமம் தீர்க்;கக் காசில்லே !

விருந்துவரக் கத்தினால் - காக்காயே
        மருந்து வைத்துக் கொல்லுவேன்
--------

மறுபக்கம்

ஏட்டளவில் புதுமைகளை எதைஎதையோ எழுதும்
        யுகப்புரட்டன் முற்போக்கு வாதியெனக் கூறி
நாட்டோர்க்குக் காதுகுத்திப் போர்த்துகிறான் போர்வை!
        நயவஞ்சன் நல்லோனாய்ப் போர்த்துகிறான் போர்வை!
பூட்டிஉள்ளே சிறைவைக்க வேண்டியவன் எல்லாம்
        “பூதம்பார், வருதா பார்” எனச் சொல்லி மக்கள்
ஓட்டாலே பதவிகளை உடும்பாகப் பற்றி
        உடன்மூட்டை அடித்தாலும் போர்த்துகிறான் போர்வை

ஒழுக்கமின்றிக் கற்பதாக ஏடுகளைத் தின்னும்
        உருப்படாத கழுதையுந்தான் போர்த்துகிறான் போர்வை
அழுக்கெல்லாம் மனத்துள்ளே அடைத்தொருவன் வெளியே
        ஆண்டவனின் அடியனெனப் போர்த்துகிறான் போர்வை!
கொழுக்க உண்ணும் வாழ்வினிலே திமிர்பிடித்து நாளும்
        கொண்டவனின் கண்முன்னே பலரோடு கற்பை
முழுக்கத்தான் விலைபேசி நாகரீகம் என்னும்
        முறைகெட்டோள் பத்தினியாய்ப் போர்த்துகிறாள் போர்வை!

பஞ்சுக்குப் பதிலாகப் பணக்கட்டு வைத்துப்
        படுக்கின்ற திமிங்கலமும் ஏழைகளின் தோழன்
மிஞ்சி மிஞ்சிப் பார்த்தாலும் நானேதான் என்பான்
        விந்தை: எனில் வசமாகப் போர்த்துகிறான் போர்வை?
நஞ்செல்லாம் கழுத்தினிலே வைத்தசிவன் போல
        நானுனது பாட்டிக்குத் தம்பிமகன் என்று
கொஞ்சிவிட்டுத் திரைமறைவில் குழிபறிக்கப் பார்க்கும்
        கொலைகாரன் உறவென்று போர்த்துகிறான் போர்வை!
--------

வாரிசுக்குத் தேவையென்ன?

(படிப்பு வாசனையற்ற ஒரு கிராமப்புறப் பெண்மணி. கல்யாணமாகிப் பலகாலமாகியும்
அந்தப் பாவிக்கு ஒரு குழந்தை இல்லை. இதைச் சாக்கிட்டு இன்னொரு கல்யாணம் செய்ய
முயல்கிறான் கணவன். எந்த மரத்தைச் சுற்றினாலாவது எனக்கு ஒரு குழந்தை பிறக்காதா? –
நொண்டி முடமாகப் பிறந்தாலும் பரவாயில்லை – அதனால் என் கணவன் என்னை விட்டு
நீங்காமல் இருக்க வழி திறக்காதா என்று கேட்கிறாhள் அவள் !)

அரசமரம் கண்டிருந்தா – தொரமாரே
        ஆராச்சும் சொல்லிடுங்க,
வருசமெல்லாம் சுத்திவந்து – பிள்ள
        வரங்கேட்டுப பாத்திடுவேன் !

கள்ளிமரம் சுத்திவந்தா – வயிறு
        கனக்குமின்னு நீங்கசொன்னா
வெள்ளியென்ன கிழமையென்ன
        வேளையெல்லாம் சுத்திவரேன்

தலைநிறயப் பூச்சூட்டி
        தங்கத்தால் தொட்டிகட்டி
தலைமுறையாப் பாட்டுக்கட்டி
        தாலாட்டுச் சரங்கோத்து

“மாமன் அடிச்சானோ
        மல்லியப்பூச் செண்டாலே
காமன் அடிச்சானோ
        கரும்பு வில்லாலே

ஆரடிச்சா சொல்லிடுன்னு”
        ஆராரோ பாடிநின்னு
மாரடிக்கப் பிள்ளவரம்
        மனசாரக் கேக்கலய்யா

தாலிகட்டி மறுவருஷம் - வயிறு
        தள்ளிநிக்கக் காணலன்னா
கேலிகொட்டிப் பேசுறாக – எம்புருஷன்
        கிழிச்சகோடு தாண்டாம

பத்து வருசமல்லோ – நான்
        பாய்விரிச்சுப் படுத்திருந்தேன்
பெத்துவைக்கப் பாதையில்ல தெய்வம்
        பேருவைக்க நீதியில்ல!

வாரிசொன்னு பிறக்கலன்னு – என்
        வயித்தில மண்ணடிக்க
யாருசொல்லிக் கொடுத்;தாரோ – எம்புருஷன்
        வேறகட்ட நினைச்சாரே!

கட்டிவச்ச திம்பண்டம்
        கைவிட்டுப் போகுமின்னு
எட்டிப்போற மச்சானை
        இழுத்துவக்க வேணுமின்னு

புருஷன்விட்டுப் போவான்னு
        புள்ளவரம் கேட்டனையா!
அரசாளக் கேக்கலியே!
        அள்ளிவைக்கக் கேக்கலியே!

நாளைக் கூழுக்கு
        நாழிகூடச் சோளமில்லை
வேளைக்குச் சோறில்ல
        வீடில்ல துணியில்ல

வயலு வரப்பிருக்கா
        வாரிசுக்குத் தேவையென்னா? - இந்தப்
பயலும் கிடந்தலைய – நான்
        பிள்ளைவரம் கேட்டலஞ்சேன்

கெட்ட கேட்டுக்கு - இந்தக்
        கிழிஞ்சரூவா நோட்டுக்கு
குட்டிப்பய இல்லன்னா -
        குடி முழுகிப் போகுதின்னு

செருப்பால ரெண்டடிச்சு
        சீருசெய்ய ஆளில்லே !
பொருப்பத்த பொறம் போக்கு – எம்புருஷன்
        புத்தியோ சொத்தப் பாக்கு

பிள்ள பெற முடியலன்னு – வேற
        பெண்டாட்டி கட்டுறதா
கொள்ளயில போறவன் - ஊரைக்
        கூட்டுறானே அதுக்காக

கால் நொண்டி கை நொண்டி
        கண் குருடா இருந்தாலும்
வால் கொண்டு பிறந்தாலும் - புள்ள
        வரந்தானே வேணு மய்யா?

குழந்த பெற முடியலன்னு – என்னக்
        குற சொல்லி ஒதுக்கிட்டு
கொழுந்தியாளக் கைவைக்க – எம்புருஷன்
        கோணப்புத்தி பாயுதுன்னு

தடுத்தாகக் கேட்டனய்யா – நான்
        தரிசாகிப் போகாம
மடிமேல ஏதோ வொண்ணு – தெய்வம்
        மனசுவைக்க வேணுமய்யா ?
--------

அரசமரம் கண்டிருந்தா – தொரமாரே
        ஆராச்சும் சொல்லிடுங்க !
வருசமெல்லாம் சுத்திவந்து – பிள்ள
        வரங்கேட்டுப் பாத்திடுவேன்.
--------

உரிமை ஏதடா உனக்கு?

அன்போடு சீராட்டி அரவணைத்து
        அகமெல்லாம் குளிரத்தான் வளர்த்திருந்து
இன்பத்தில் வாழ்கின்ற நிலையைத் தந்தால்
        ஈன்றவரின் கடமைநிறை வேறு மென்று
முன்பெல்லாம் சொல்லிடுவார்! இன்று மக்கள்
        முன்போல ‘எண்ணி’யெங்கே பெறுகின்றார்கள்
அன்றையநாள் போல் - பிள்ளை பெறுதல்விட்டு
        அடுக்கடுக்காய்க் குட்டியன்றோ போடுகின்றார்

“பெற்றெடுத்த பிள்ளையதன்தேவை என்ன?
        பிணியின்றி வாழ்ந்திருக்கப் பாதை என்ன?
கற்றுயர வசதி தந்து, இளமை நெஞ்சின்
        கனவுகளை நிறைவேற்ற வகைதான் என்ன?
சற்றேனும் இவையெல்லாம் நினைக்கின்றாரா?
        சத்துண்டா தேவையெல்லாம் செய்துவைக்க?
இற்றேநாம் திடுமென்று இறந்து விட்டால்
        இவை வாழ வாய்ப்புண்டா இந்த நாட்டில்?


எச்சில்இலைத் தொட்டிகளின் ஓரம் நின்று
        எகிறிவரும் நாய்களையே விரட்டித் - தின்று
பச்சையிளம் பிஞ்சுபல – கந்தல் சுற்றிப்
        பாதையோரம் கிடக்கின்ற பஞ்சை நாட்டில்
இச்சிறார்கள் நமக்குப்பின் ஏது செய்வார்!
        இப்படித்தான் திரிவாரோ?’ என்று கொஞ்சம்
அச்சுறுத்தல் இவர்க்கெல்லாம் இருந்திருந்தால்
        அடுத்தவேளைச் சோற்றுக்கு வகையும் கெட்டோர்

பிள்ளைபெற நினைப்பாரா? கணநேரத்துப்
        பெண்டாட்டி சுகத்தாலே பெற்றெடுத்துத்
துள்ளுகின்ற இளமையிலே வறுமைத் தீயில்
        துடிக்கவிட்டுக், கல்வியின்றி வளர விட்டு,
“கொள்ளையரை, தீராத பிணிகொண் டோரை
        கூசுகின்ற சிகப்பு விளக் கொளியில் தம்மை
அள்ளிவிற்று வாழுமொரு பெண்குலத்தை
        அன்றோஇக் கொடியவர்கள் பெருக்கு கின்றார்?

சுயநலத்தைக் கருதி – உங்கள் சுகத்துக்காகச்
        சுடர்வீசும் மணி பெற்றுச் சாக்கடையில்
தயவின்றி வீசும் தாய்க்குலமே கொஞ்சம்
        தயை கூர்ந்து நினைத்துப்பார்! காலமெல்லாம்
துயரினிலே தவிக்கின்ற நிலையை இந்தத்
        தூயவர்க்குத்தர – உரிமை யார்கொடுத்தார்?
இயலாத போது ஒன்றைப் பெற்றெடுத்து
        இம்சைதர உனக்குரிமை யார்கொடுத்தார்?

தான்பெற்ற பிள்ளைஇந்த வையத்துக்குள்
        தகுதியுடன் வாழவகை செய்துவிட்டு
வான் போக முடியாத, வக்கற்றோர்கள்
        வரிசையாகப் பெற்று – அவரைத் துயரத்துக்குள்
ஏன் தள்ள நினைக்கின்றார்? இவர்கட்கெல்லாம்
        என்னகொடும் தண்டனைதான் கொடுத்த போதும்
நான் திருப்தி அடைய மாட்டேன், இவர்க்கே என்று
        நரகமொன்று இல்லையெனில் புதிதாய்ச் செய்வோம் !
---------

மரணத்தின் மடியில்

(மரணத்தின் தலைவாசலில் - உற்றார் உறவினர் சுற்றி நிற்க அவன் மனமோ,
அவசரகதியில் - கடந்த காலத்து நினைவுகளைக் கரைக்கிறது.)

கொடுமைக்குள் வாழ்வதற்குப் பிறந்துவிட்ட நிலையெண்ணிக்
        ‘குவா, வென்று கூவி அழுது
முடிப்பதற்குள் இது என்ன ? எனைச்சுற்றிப் பலர்கண்ணை
        முந்தானை யாலே துடைத்து
வடிக்கின்றார் கண்ணீர்? ஓ! என்கதையும் முடிந்திறுதி
        வணக்கமெனப் போடும் நிலையை
அடைந்துவிட்டேன் போலும் நான் ! அய்யய்யோ, காலமேநீ
        அதற்குள்ளா ஓடி முடிந்தாய்?

விளையாட்டுப் பொம்மைகளை நெஞ்சோடு அணைத்தவணம்,
        வேடிக்கை காட்டி உணவைக்
குழைந்தெனக்கென் தாயூட்டப் பொம்மைக்கு நானூட்டித்
        தாலாட்டி வைத்த, நிலையில்
விழிமூடி எனைமறந்து தாய்மடியில் தூங்கிய நாள்
        விளையாட்டுப் போலே கடந்து
குழி மேட்டில், மரணத்தின் மடிமீது தலைவைத்துக்
        கொண்டுறங்கும் நாளை அடைந்தேன்!

பள்ளிமணி ஓசை கேட்டு வெள்ளைமனச் சிறுமி’ அவள்,
        பல்லினிலே வைத்துக் கடித்துக்
கொள்ளை அன்பில் தந்தநெல்லிக் காய்வாயில் போட்டவண்ணம்,
        கூடி, அவள் கையைப் பிடித்துத்
துள்ளித்தான் ஓடியநாள் நேற்றுத்தான் போலே என்
        தூங்கிவிட்ட நெஞ்சில் தெரிய
வெள்ளமெனும் காலத்தின் வேகத்தில் கடல்கலக்க
        விரைகின்றேன் கண்ணீர் சொரிய!

புன்னகையில் பூத்துவரும் அன்னைமுகம் நெஞ்சத்தில்
        புரையோடிப் போன நிலையில்
கன்னத்தில் கைவைத்துக், கண்ணீராம் குளப்படியில்
        கால்வைத்திறங்கிக் குளிக்கும்
எண்ணத்தில், நிர்மலமாய், மங்கலாகத் தெரிகின்ற
        என்னருமைக் காதல் மனைவி ….
இன்பத்தில் அவளோடு சொர்க்கத்தை எட்டியதை
        எப்படித்தான் நானும் மறக்க?

இதழ்ச்சாறும் என்மனைவி முகஅழகின் பிரதியென
        இலங்கு நிலா முன்னே அமர்ந்து
பதமாக அவள்தந்த நிலாச் சோறும் உண்(டு) அவளின்
        பருவத்தைப் பார்த்தே கிறங்கிச்
சுகமாக அவள் மடியில் உறங்கிய நாள் - நேற்றுப் போல்
        துல்லிதமாயக் கண்ணில் தெரிய
புகுகின்றேன் எமனுலகு! மரணத்தின் மடியில் நரை
        பூத்ததலை தூங்கிச் சரிய………


எத்தனையோ இன்பங்கள், என்னென்ன உள்ளங்கள்?
        எல்லாமே கண்ணில் தெரிய
அத்தனையும் கடைசியாக அலையாட மீண்டுந்தான்
        ஆசைபல நெஞ்சில் விரிய
முத்தத்தில் குடியியருக்கச் சொத்தாக இருந்தவளின்
        மோனத்தில் பாசம் நெளிய
மொத்தத்தில் சாவுலகு முற்றுகைக்குப் போகின்றேன்!
        முகங்காட்டும் சோகம் மறைய!

முற்றாத இரவுபல: முத்தான வரவுபல
        முத்திரைகள் இட்ட சுவடாய்
வற்றாத உறவுபல வழங்கியவர் முகங்காண
        வாதைதான் துடிக்கும் புழவாய்!
கற்றேதான் தெருவளந்த கால்நடக்கத் தளர்ந்ததனால்
        கடுங்கோபம் கொண்ட மனமே;
இற்றேதான் போவதற்குன் இதயத்துத் துடிப்புகளை
        எண்ணிக்கொள் ஆவாய் பிணமே !

சிற்றாடை பின்சுற்றிச் சுற்றாக இடைசுற்றிச்
        செவ்விதழில் வாழ்ந்தேன் குடியும்
மற்றோர்க்குக் கல்லில்நர் உரித்துக், கண்ணீர் வடித்த
        மனிதனுக்கும் வாழ்வு முடியும்
சுற்றியுள்ளோர் நால்வர்தோள் பவனியுண்டு ; சாவென்றால்
        தூக்கம்தான் உறவுக்கு இனியே !
சிற்றொலியாய் ஒலிக்கின்ற இதயத்துத் துடிப்போசை
        செத்தொழியும் சாவு மணியே!
--------

வேண்டாம் இந்தக் காதல் !

கருத்தழிந்து, கல்வியில் நாட்டமிழந்து சாகவும் துணிந்து – பெற்றவரைப் பெரும்
வேதனைக்குள்ளாக்க இருந்தார். அவரை நல்வழிப்படுத்த எழுதிய கவிதை இது –
இந்தக் கவிதையினால் மனம் மாறி – உறுதியுடன் உழைத்துப் படித்து- இன்று
நல்லதொரு வக்கீலாகத் திகழ்கிறார், இந்த நண்பர்)

காதலி மறந்தாள் என்று
        கல்வியும் துறந்தே நின்று
சாதலும் துணிந்த நண்பா,
        சற்றுநீ கதையைக் கேளேன்,
அன்றொரு காதல் பேயின்
        ஆணையை ஏற்ற மைந்தன்
அன்னையைக் கொன்றான்; ஆசை
        அரக்கியின் காலில் வைக்க

இதயத்தைப் பிளந்தெ டுத்து
        ஏகினான் இரவின் ஊடே !
உதயத்தை நினைந்தான் இல்லை,
        உன்மத்தன் ! ஓடும் போது
கல்லிலே தடுக்கி வீழ்ந்தான்
        கல்நெஞ்சன்: அந்நே ரத்தும் -
கொல்வதற்கு அஞ்சா மைந்தன்
        கூறுதான் போட்ட போதும்,

“பார்த்துநீ வரக்கூ டாதோ?
        பட்டதோ காயம், கண்ணே!
சேர்த்தணைக்கின்ற நானும்
        செயலற்றேன்?” என்று, பாசம்
உதறிய மகனுக் காக -
        ஒவ்வொரு துளியாய் வீழ்ந்து
சிதறிய இதயம் எல்லாம்
        சிந்திற்று இரத்தக் கண்ணிர் !

என்றொரு கதையை நீயும்
        இதற்குமுன் கேட்டிருப்பாய் !
வென்றிடு மனதை ! காதல்
        வேள்வியில் பலிகொடுத்த
கல்வியில் நாட்டங் கொண்டு
        காவியம் படைப்பேன் என்று -
செல்லுக நண்பா, இந்தச்
        சிறியவன் பேச்சைக் கேட்டு !

சொல்லரும் துயர்கள் தாங்கி,
        சோற்றுக்கும் பலநாள் ஏங்கி
அல்லல்கள் பட்டும் பெற்றோர்
        அனுப்பினார் கல்வி கற்க!
தாயவள் சாதல் நன்றா?
        தளிர்க்கொடி காதல் நன்றா?
தூயவன் நீயோ இந்தத்
        தொடர்கதை எழுது கின்றாய்?

சலனங்கள் தமையெல்லாம் சாக்கடையில் தூக்கி எறி!
பலவீனன் இல்லையெனப் பழங்கதையைத் தூளாக்கு !

பட்டினியும் பசித்துயரும் பாதிகொன்ற நிலையினிலும்
வட்டிக்குக் கடன்வாங்கி வழியனுப்பிப் படிக்கவைத்து
பட்டாடை வரும்இந்தப் பழங்கந்தல் போகுமென
மட்டில்லா நம்பிக்கை மகன்மீது வைத்தபெற்றோர்

நெஞ்சத்தின் ஆசைகளில்; நின்றேறித் தான்மிதித்து
கொஞ்சிட்ட தாய்மனது குமுறத்தான் வேண்டுமெனில்
வஞ்சகியின் பின்போன மனதோடு குமைந்துகிட !
தஞ்சமென வெற்றிபல தரும்கடவுட் கொப்பான

பெற்றோரின் மனங்குளிரும் பேறுகிட்ட வேண்டுமெனில்
வெற்றுடம்பு தான்நினைந்து வேதனையைத் தான்கலந்து
கற்காமல் சுற்றியது கழுவேற வேண்டுமெனில்,
நிற்காத பெண்மையை நினையாமல் வாழ்க்கையில்

        முன்னேற வேண்டுமெனும் முனைப்பொன்றே தான்கொண்டு
        முன்னேறு ! முன்னேறு ! முழுமூச்சாய் முன்னேறு
-------

இதுவா சுதந்திரம்?

உடும்பெனப் பிடித்து நம்மைத் - தினம்
        உலுக்கிடும் மடமைகள் தம்மிடமும்
விடுதலை பெறவில்லை – நாட்டை
        வீழ்த்திடும் வறுமையும் குறையவில்லை

கொடுமுறைச் சாதிபல – பேசும்
        கும்பலும் பிணியெனத் தொடர, அதன்
அடிமையாய் வாழ்கின்றோம் - இந்த
        அவலமா சுதந்திரம் ? போடா, போ
------------

அரசியல் பொருளா தார
        அடிமைகள் ஆக இங்கே
வரண்ட தாய்க் கொள்கை பேசி
        வாழ்ந்திடும் வரையில், ஊழல்

இருட்டிலே லஞ்சப் பேய்கள்
        ஈ யென இளிக்க, நாசச்
சுரண்டலும் வதைக்கு மட்டும்
        சுதந்திரம் பெற்றோம் இல்லை!
---------

ஏன் பிறந்தேன் இத்துயர் நாட்டில்?
(கவியரங்கக் கவிதை)

பாரதத் தாயே, பாரதத் தாயே!
        பாவியாய் எம்மைப் பெற்றெடுத்து
பாரினில் உள்ள பஞ்சையர் கணக்கில்
        பதிவுறச் செய்த பெருமகளே!

சூரியன் உதித்தும் சுதந்திரம் பெற்றும்
        சோம்பலை முறிக்க மனமின்றிக்
காரிருள் தன்னில் கலங்கிட என்னைக்
        கருத்தரித்தவளே, முதுமகளே!

ராத்திரிச் சோறு ரஷ்யனின் கணக்கில்!
        ரகசியமாக மந்திரிகள்
பாத்திரம் கொண்டு பகல் உணவிற்குப்
        படையெடுத்தார்கள் பலநாடு!

ஏனடி இந்த இழிநிலை தன்னில்
        என்னையும் பெற்றாய் மடக்கொடியே?
போனதே மானம், தரித்திர நாட்டுப்
        புத்திரன் என்ற அடைமொழியே

தானடி பெற்றேன்! சரித்திரம் கண்ட
        சான்றுகள் மட்டும் சொல்லிவிட்டாய்!
தானமும், கல்வி கானமும் கொண்ட
        தாயவள் நீதான் ஒப்புகிறேன்

உலகமெலாம் தலைவணங்கி உனதுபுகழ் பாடிநின்ற
        ஒருகாலம் நீயோ அரசி - இன்று
விலைவாசி ஆட்சிபீட விளையாட்டு நடத்த, உன்னை
        விட, உயர்ந்து போன(து) அரிசி!
உத்தமனாம் காந்திதனை ஒருகாலம் பெற்றெடுத்த
        உள்நினைப்பில் மஞ்சள் உரசி
இத்தனைநாள் குளிக்கின்றாய்! ஏமாளி நீ அசந்தால்
        இட்டிடுவார் உன்வாய்க்(கு) அரிசி!

பெற்றெடுத்த தேசபக்தர் பேர்நினைந்து, மெய்மறந்து
        பேதலித்துப் போன உன்னையே,
விற்றுவிடக் கட்சிபல, வெளிநாட்டுப் பணத்துக்கு
        வேகமுடன் நிற்கு(து) அன்னையே!

ஒப்பரிய கலைப்பொருள்கள் உனக்காகக் கொண்டுவர
        உயர்கப்பல் ஏறிப் பறந்தோம்!
இப்போது உன் கோவிலெங்கும் ஒருசிலையும் விடமாட்டோம்
        உள்ளதெல்லாம் விற்க முனைந்தோம்!
………..

இத்தனை கோடி பெற்றாய் - அம்மா
        இன்னுமா பிள்ளைதாகம்?
சுத்துதே கணக்கெடுத்தால்
        சுரபியோ உன்வயிறு?

இளமையில் வளங்களோடு – நீ
        இருந்தநாள் பெற்றா(ய்) இன்று,
இளமயில் நீயல்ல! – நரைத்தும்
        இன்னுமா தாம்பத்யம்!

முப்பது கோடியென்றான் - பாரதி,
        முப்பது அறுபதாச்சு !
எப்படி உன்னிடம் தான் - அச்சு
        உள்ளதோ பிள்ளைசெய்ய? – எங்கள்

வயிறுகள் காய்கிறது! – உன்
        வயிறுமட்டும் காய்க்கிறது!
பயிறுகள் காய்ப்பதில்லை – மனிதப்
        பதறுகள் சலிப்பதில்லை?

பெற்றது போகட்டும் - தாயே, நீ
        பெற்றதைப் பேணினாயா
சுற்றிட வசதி உண்டா? கல்வி
        கற்பதால் வேலை உண்டா?

‘குவைத்’திலே சேக்கு வீட்டில் - அவன்
        குடித்தபின் புரண்டிருந்து
துவைத்திடப் பார்ப்பதற்கா – எங்கள்
        தோகையர் தம்மைப் பெற்றாய்?

மலர்களாய் மணம் விரித்து – அந்த
        மங்கையர் கொத்துக் கொத்;தாய்
விலைமகள் போல மாற்றான் - மண்ணில்
        வீழ்ந்திடும் கொடுமை அந்தோ!...

“தெரு வெல்லாம் சிலைகள் வைத்து” – அரசு
        சிரமங்கள் தீர்ப்பதாலே,
இருக்கவோ இடமுமில்லை - இங்கே
        இருப்பதும் கொடிய தொல்லை!

இன்னும் கேட்பாய் என்திருத் தாயே!
        பொன்னும் மணியுமாய்ப் பொலிந்திருந்து, இன்று
கன்னம் குழிந்து காசநோய் உழன்று
        என்பும் தோலுமாய் ஏக்கம் பிடித்தாயே!
-----------------

காக்கையுடன்; குருவிஎங்கள் ஜாதி என்று
        கவிமன்னன் சொல்லிவைத்தான், இன்றோ நாங்கள்
தூக்கிலிட்டோம் சமததுவத்தை! உடன்பிறந்த
        தூயவரை, நீபெற்ற பிள்ளைக்குள்ளே
தீக்குலமாய்ச் சிலபேரை ஒதுக்கிவைத்துத்
        ‘தீயிட்டுப் பார்க்கின்றோம் அவர்தம் வீட்டை’
போர்க்களமாய் ஆகியதே உனது வீடு!
        பொசுங்குகிறார் அரிஜனங்கள் உயிர்களோடு!

காசுக்குப் பறக்குதடி உனது கூட்டம்!
        கயமைக்கும் கொள்ளைக்கும் தான்கொண்டாட்டம்!
கூசுதடி நெஞசமெல்லாம்! குமுறிக் கண்ணீர்
        கூடுதடி! ஓடுகிற ரயிலில் இங்கே
நாசகாரர் தாலியினை அறுத்தெறிந்து
        நகைக்காகக் கொன்றுவிட்டு நகைத்திருந்த
மோசமெல்லாம் கண்டுவிட்டும் தாயுனக்கு
        மூச்சடைக்கவில்லை! இன்னும் பெற்றுத்தள்ளு!

அன்றொருவன் மாண்டுபோன மனைவிக்காக
        அழகான தாஜ்மஹாலை எழுப்பிவைத்து
வன்சிறையில் போட்டாலும் அதனைக் காணும்
        வாய்ப்பொன்றே வேண்டுமெனறான்! இன்றோ நாங்கள்
என்செய்தும் உன்வீட்டில் வாங்கி வாடீ,
        ஏற்றதொரு ஸ்கூட்டரெனக் கேட்போம்! அந்தப்
பொன்மகளோ இல்லையென வந்துவிட்டால்
        பொன்மேனி புண்ணாக எண்ணெய் ஊற்றிக்

குளிக்கின்ற அறைக்குள்ளே பூட்டிவைத்துக்
        கூப்பாடு போடாமல் தீயைவைத்து
எளிதாகத் தற்கொலைதான் என்று சொல்லி
        இன்னொன்று தேடிடுவோம்! காதல் என்ற
கிளி இன்று சிக்கியது குரங்கு கையில்,
        கேலியல்ல! பால்குடியும் மறக்கும் முன்னர்
நெளிகின்றார் புழுவாக! கட்டிச் சேர்ந்து
        நிமிர்ந்தேதான் நடக்கின்றார் ஜோடியாக!

கல்விகற்கும் கூடமெல்லாம் காதலென்று
        கருமாதிக் காரியங்கள் நிறைந்ததம்மா!
நல்லதொரு காதலென்றால் போற்றுவேன் நான்!
        நாயகரின் காதலெல்லாம் மேனி ஆசை!
கல்கூட உருகிவிடும் இந்தநாளின்
        கல்விநிலை படும்பாடு! பட்டம் எல்லாம்
செல்வரிடம் காத்திருந்து அவர்தம் ரேட்டில்
        சிக்கிவிடும், டாக்டரேட்டின் விலைதான் ஜாஸ்தி!
       
காவியங்கள் கண்டவள் நீ! காய்ச்சல் பாட்டில்
        கவியெழுதி ஓரம்போ’ என்று சொல்லிப்
பாவியர்கள் புதுச்சரிதம் படைத்துவிட்டார்!
        பாழும் உடல் ஆசைசொல்லும் இலக்கியங்கள்

தேவி உந்தன் திருவடியில் கூடும் கோடி,
        திருத்தஒரு ஆளின்றிப் போனதேடி!
தூவி விட்ட விஷவிதைகள் நாடு முற்றும்
        துளிர்விட்டு வளருதடி அராஜகங்கள்

நாளுமொரு போராட்டம்! நாராசம் போல்
        நாளுமொரு புதுக்கோஷம் ! இவைகள் எல்லாம்
கேளாதோ உன்செவியில்? எனது தாயே!
        கேடுகொட்டோர் போராட்டம் என்ற பேரில்
தூளாக்கிப் பொதுச் சொத்தை நொறுக்கும் போது
        துடிக்காதோ உன்மனது? பஸ்ஸைத் தீக்கு
ஆளாக்கி எரிக்கையில் அவரைப் பெற்ற
        அன்னை உன் வயிறுபற்றி எரியாதோ சொல்?
……….

இதுவெல்லாம் கிடக்கட்டும்
        இந்தியத் தாயே, நீ
இது வரைப் பட்டகடன்
        இருக்க இன்னும்,

கோடி கோடி கடனை வாங்கிக்
        கூன்வளைந்து நடக்கிறோம் - எனில்
முடங்கி இங்கே கிடக்கிறார்,
        மூடி வைக்க ஏது மின்றி

ரோடின் ஓரம்? இந்நிலையில்
        ரோகிணியா முக்கியம்?
கேடுகெட்ட நாட்டிலிந்தக்
        கேவலங்கள் நித்தியம்!

தேடி வாங்கிக் கடனில் இங்கே
        தேர்தலையே நடத்துவோம்!
கூடிநின்று கேள்வி கேட்டால்
        குண்டு பாய்ச்சிக் கிடத்துவோம்!

ஆடு போல மக்கள் கூட்டம்
        அதனில் ஏறி ஆளுவோம்!
கூடுவிட்டுக் கூடு பாயும்
        கோலம் கட்சி மாறுவோம்!

வேலை, வேலை, வேலை யென்று
        வேலை தேடி நாளுமே
ஓலை விட்டுக் காத்திருந்து
        உனது பிள்ளை சாகுமே!

ஆலைப் பட்ட கரும்பு போல
        அகப்பட்டே நான் விழிக்கின்றேன்
ஏழைப்பட்ட நாட்டில் என்னை
        ஏன் படைத்தாய் தேவனே?

புண்பட்ட மனத்தினோடு
        புலம்பினேன் இதுவரையில்!
கண்கெட்ட பின்தானே
        கதிரவன் வணக்க மெல்லாம்!

என்செய்ய? என் அறிவில்
        எவ்வழியும் தோற்றிலது!
புன்செய்யே ஆனாலும்
        பொழுதெல்லாம் உழைக்கலாம்!

கருங்கல்லைக் கொடுத்துக்
        கணக்காக உழுதி டென்று
பெருமான் படைத்துவிட்டான்?
        பேதலித்துப் போனேன்!

ஏன் பிறந்தேன்நான்
        இத்துயர் நாட்டில்?
வான்திறந்து அழைத்தால்
        மகிழ்வோடு போவேன்!
--------

பாரதி பாதையில்
(கவியரங்கக் கவிதை)

பாரதிப் புலவன்,
யுகம்பல தமிழ்மகள் இயற்றிய தவப்பயன்!
        இழிநிலை அடிமையில்,
அகமகிழ்ந்திருந்தவர் அலையென எழக்குரல்
        எழுப்பிய கவிக்குயில்!

மிகும்மடச் சாதிகள் மிரளவே புரட்சியை
        மீட்டிய எரிமலை!
தகும்மதி மங்கையர் தமக்கொரு நீதியைத்
        தகர்த் தெறிந்த பேரலை!

தவமறை உரைப்பன, தனைஒரு வரியினில்
        தருகிற அறிவொளி!
அவப்பெயர் சுமந்தநம் அன்னையின் விலங்கினை
        அறுத்தெறிந்த சொல்உளி!

நவயுகப் பாதையில் நமையெலாம் வீறுடன்
        நடத்திய தலைமகன்!
எவன் எனில் என்ன, ஓர் தவறெனச் செய்கையில்
        எரித்திடக் கொதித்தவன்!


அவன்,
தனி ஒரு மனிதனுக் குணவிலை எனில்ஜகம்
        தனை அழித்திடும் புயல்!
கனிஎனும் தமிழ்மொழிக் கவிதையில் பலவகை
        காய்க்கிற புதுவயல்!

பனிமலை இமயமும் பார்புகழ்க் குமரியும்
        பாவினில் இணைத்தவன்,
இனிஒரு புதுவிதி இயற்றிடுவோம் என
        இளமையை இசைத்தவன்!

கண்ஒளி கண்ணனாய்க் கண்விழி தானுமாய்க்
        காதலில் கனிந்தவன்
கண்ணனே அரசனாய்க் கண்ணனே யாவுமாய்க்
        காவியம் புனைந்தவன்

பெண்மையைப் பூட்டியே பேதையாய் ஆக்கிய
        பெருந்துயர் களைந்தவன்,
பெண்மையே சக்தியாய்ப் பெண்மையே காளியாய்ப்
        பித்தனாய் நினைந்தவன்!

தமிழ்மொழி வாழ்கெனத் தரணியில் முதல் முறை
        தனிக்குரல் விடுத்தவன்,
எமதரும் பாரதம், அடைந்ததே சுதந்திரம்
        எனக், கருக் கொடுத்தவன்!

எமனையே மிதிக்கிறேன் என்னிடம் வாவென
        எதிர்க்கணை தொடுத்தவன்,
சுமையென வறுமையைத் தோள்களில் சுமந்துதன்
        தொடர்கதை முடித்தவன் ……… அவன்,

வெள்ளையரை விரட்டுதற்கு வகைதான் செய்தான்!
        விலைகூறிச் சமூகத்தை விற்று வாழும்
கொள்ளையரை விரட்டிவிட்டு நாடு காக்கக்
        குறிப்பொன்று சொல்லாமல் போனான் அந்தோ?

அள்ளுகின்றார் சமுதாயச் சொத்தை எல்லாம்
        அவர்பைக்குள் போட்டுவைத்து நாட்டைப் பஞ்சம்
கிள்ளுகின்ற நிலைமைக்குக் கொண்டு தள்ளிக்
        கேட்பாரும் இன்றிநம்மை ஆளுகின்றார்!

மாதரையே இழிவுசெய்யும் மடமை தன்னை
        மண்எண்ணெய் இட்டுத்தான் கொளுத்தச் சொல்லிப்
போதித்தான் பாரதியும் ! நாமோ இன்னும்
        போய்விட்டோம் ஒருபடிதான் மேலே! இன்று

காதலின்றிக் காசு-வர தட்சணைக்குக்
        கைப்பிடித்துச் சீர்வரிசை பாக்கி கேட்டு
மாதரையே எரிக்கின்றோம் ! அய்யா அந்த
        மன்னனுக்கு விழா எடுக்கத் தகுதி உண்டா?

சாதிகள் இல்லையடி பாப்பா என்று
        சாற்றுகின்றான் பாரதியும்! நாமும் இங்கு
வேத முத்து நாடாரின்; பாப்பாவுக்கும்
        வெள்ளையப்ப செட்டியாரின் பாப்பாவுக்கும்

சாதிகள் இல்லையெனச் சொல்லிச் சொல்லிச்
        சமாதியன்றோ கட்டுகிறோம் பாரதிக்கு!
மோதுகின்ற இடமெல்லாம் சாதிவைத்து
        முழங்குகிறோம் அவன்பெயரை! அவனோ, காக்கை

குருவி எங்கள் ஜாதியென்று கூறிச் சென்றான்!
        கொஞ்சம் நம் காதுமந்தம்! அதனால் தானோ
மருவியது வாசகங்கள் நமது வாழ்வில்?
        மனமாரக், காக்கை பிடித்தலைவதெங்கள்

திருச்சாதி எனச் சொல்லி அதிகாரிக்குத்
        தினம் கூழைக் கும்பிடுதான் போட்டு நின்று
பெருச் சாளிக் கும்பலுக்கு நாட்டை விட்டுப்
        பெருவிழாக்கள் எடுக்கின்றோம் பாரதிக்கு!
--------

கவிமன்னன், பராக்…..!

(5 – 2 – 72 அன்று அமெரிக்கன் கல்லூரிக்கு வருகை தந்த
கவியரசு கண்ணதாசனுக்கு வரவேற்புரை)

காதை சொல்லும் கோதையர்தம் கவினோடு தேர்ஏறிக்
        கனவு கூட்டி – அந்தப்
போதையில் கவிச்சிறகைப் புதுமையுடன் விரிக்கின்ற
        புரட்சி வேந்தே!

ஆள்பிடித்து வால்பிடித்து ஆதரவைக் கால்பிடித்து
        ஆட்டமிட்ட தமிழ்ப்பகையைத்
தூள்படுத்தச் சூளுரைத்து வேலெடுத்துப் போர் முடித்து
        ஓட்டமிட வைத்தவனே வருக! – எங்கள்
        நாட்டமெல்லாம் ஈர்த்தவனே வருக!

ஓலமிட்டுக் கூலிபெற்று ஒப்பாரிப் பாட்டெழுதித்
        தாளமிட்ட தமிழுக்கு லத்தில் - இந்த
ஞாலமுற்றும் காவியங்கள் போற்றிடநாம் தந்தமென்னும்
        ஞாபகத்தைச் சேர்த்தவனே, வருக! – நரம்பு
        நாளமெல்லாம் நிறைந்தவனே வருக!

சாக்காட்டில் மூடநெறிச் சாதிவெறி வேக்காட்டில்
        சாவோலம் இட்ட பேரைப்
பூக்காட்டில் புத்துலகப் புன்னகையின் வண்டினங்கள்
        ரிங்காரம் கேட்கவைத்தாய் வருக – கவிதைப்
        பூங்குயிலே, தீந்தமிழே வருக

காதலிலே மறுமலர்ச்சி கண்டவனே, வருக – எங்கள்
        கல்லூரிச் சோலைஎழில் கனி அமுதம் பருக! – செல்லும்
பாதையெல்லாம் கவிமணக்கும் கவியரசே, வருக – நின்
பாங்கான பேச்சாலே தமிழ்ப்போதை, தருக! – மதுக்

கிண்ணதாசன் என்பதிலோர் கீர்த்தி பெற்ற
கண்ணதாச, நின்தாசன் வரவேற்றேன் வருக!
-------

இதோ. இந்தக் கவிஞன் !

வளையோசைச் சலசலப்பில் ஆடுவான் - அன்பின்
        அலையோசைக் கலகலப்பில் பாடுவான் - மரக்
கிளைக் கூட்டின் இன்பஒலி நாடுவான் - அழகின்
        கிளை தேடி உலகெங்கும் ஓடுவான்

        இவனெரு சுதந்திரப் பறவை – என்றும்
        ஏற்பது இதந்தரும் உறவை!
புதுப்புடவைச் சரசரப்பில் துயில்கிறான் - அணைப்பின்
        புதுமையிலே கிளுகிளுப்புப் பயில்கிறான் - கன்னக்
கதுப்பில்இதழ் ஓவியமும் வரைகிறான் - கிண்ண
        மதுவினிலே காவியமும் தருகிறான்!

        இதழ்எனும் பூமியில் ராஜா - இவன் மனம்
        எழில்மிகு வசந்தத்து ரோஜா!
விழியாலே மொழிபேசி வருபவள் - இவன்
        கவியாலே வலைவீச விழுகிறாள் - ஒரு
விழியசைவில் கால்தொட்டுத் தொழுகிறாள் - மார்பில்
        விரும்பாத போதும்வந்து விழுகிறாள்!

        ஆட்டிவைத் தாள்கிற கவிஞன் - பெண்மையாழ்
        மீட்டியே சுவைத்திடும் கலைஞன்!
தளைப்பட்டு நில்லாது திரிகிறான் - எவர்க்கும்
        விலைப்பட்டுச் செல்லாமல் வருகிறான் - கதிர்
ஒளிமுட்டிச் செல்லாத பாதையில் - இவன்
        தனிப்பட்டுச் செல்வான்ஓர் போதையில்!

        புதிர்க்கொரு புதிரிடும் தலைவன் - இவனைப்
        புரிந்திட விழிக்கிறான் மனிதன்!
-----------

மூன்றுமணி துயின்ற விழிகள்

(சுதந்திர தின வெள்ளி விழாவை ஒட்டி, மதுரைப் பலகலைக் கழகம் நடத்திய
மாணவர் கவியரங்கில் நேருஜியைப் பற்றிப் பாடியது)

தலைமுறைகள் பலவரையில் வருகின்ற பணங்கோடி
        தனைமறந்து வந்து தெருவில்
கொலைமுறைக்கும் அஞ்சாத குண்டரிடம் அடிபட்டுக்
        குற்றுயிராய் வீழ்ந்து நினைவின்
அலையோட்டம் விடுதலையாய் அன்னைநம் நாட்டிற்காய்
        அவதிபல பட்ட நேரு,
தலைமகனாம் அவன்பெருமை மனம் நிறைய இந்தியத்
        தவமகனை நினைத்தேன்! சிலிர்த்தேன்!

ஒருவாசல் தனில்காரும் வந்திருந்து காத்துநிற்க
        உணராமல் வேறு வழியே
திருவாழும் இளஞ்செல்வன் திகைப்பதுவும் நேருமெனத்
        திசைக் கொன்றாய்க் காரை நிறுத்தி
ஒருதுன்பம் அறியாமல் மோதிலாலாம் பெருமகனார்
        ஊட்டிஊட்டி வளர்த்த செல்வன்
அருந்தாயின் விலங்கொடிக்க இவன்தானா சிறையிருந்தான்?
        அம்மம்மா! நினைத்தேன்! சிலிர்த்தேன்!

விடுதலையை அடைந்தபின்போ, விரைவான முன்னேற்றம்
        வேண்டுமென நாளும் நினைந்து
கடுமையாகத் தினம்உழைத்து ஒருநாளில் மூன்றுமணி
        காலந்தான் தூங்கி அலைந்தான்!
விடும்மூச்சும் பாரதமாய் விழித்திருந்த என்கோமான்
        வீழ்ந்துவிட்ட பின்னும் உடலைச்
சுடும்சாம்பல் தனைஎனது திருமண்ணில் கலந்திடென்று
        செய்ததையும் நினைத்தேன்!சிலிர்த்தேன்!

எமக்குள்ளே காவியமாய் இணைந்து விட்ட
        என்தலைவா, என் தலைவா! சுதந்திரத்தை
அமைத்திடவே நீ வடித்த குருதி யாலே
        அமைத்துவிட்டோம் நம்கொடியின் சிவப்பு வண்ணம்!
அமைதியுடன் யாம்வாழ உழைத்த நீயோ
        அடங்கிவிட்டாய்! குழந்தைகளை அணைத்து நிற்கும்
அமுதான உன்நெஞ்சைப் பாவியர்கள்
        அனல்மூட்டி எரித்து விட்டோம்! கொடுமை அந்தோ!

எப்படித்தான் நாமுழைத்தும் இந்த மக்கள்
        ஏன், உயர மறுக்கின்றார்? அய்யோ, சீனன்
இப்படியா தோள்மீது போட்ட கையை
        எடுக்கும்முன் பாரதத்தை வளைக்கப் பாய்வான்?
ஒப்பரிய எழுத்தாளன் நேரு நீயோ
        உளம் நொந்தாய் இவையெல்லாம் எண்ணி ஏங்கி?
அப்பப்பா! அடர்ந்திருக்கும் கான கங்கள்
        அழகுடனே அழைக்குதென எழுதி வைத்தாய்!

ஆனாலும் கடமைபல உறங்கும் முன்னே
        ஆற்றிடுதல் வேண்டுமெனத் துடித்தாய்! அய்யோ,
வானோர்கள் நீகுவித்த புகழி னாலே
        வறுமையுற்றார் போலுமுனை அழைத்து விட்டார்!
ஏனோ, நீ சென்றுவிட்டாய்? இந்தியத்தாய்,
        “எனக்குழைத்துக் களைத்தவனே! மடியில் வந்து
வானாளின் துயர்தீரத் தூங்கி டென்று”
        வாய்நிறைய அழைத்தாளோ, சென்றுவிட்டாய்!

துயரினிலே எமைத்தவிக்க விட்டு விட்டுத்
        தூங்குகிறாய், இதுஉனக்கு நீதிதானா?
மயங்குகின்ற குழந்தையர்கள் விட்டுச் சென்ற
        மாமாவே உன்னோடு டூ, டூ என்று
செயல்மறந்து விளையாடத் தாம்மறந்து
        செப்புவதும் காணாயோ – போ, போ உன்னை
இயன்றவரை எம்முடைய ஞாப கத்தில்
        எழுப்பிடவே மாட்டோம், போ! ஏனா, கேள், கேள்!

கணமேனும் உனைமறந்து இருந்தால் தானே
        கடைகெட்டு ஞாபகத்தை எழுப்ப வேண்டும்?
துணிவுமிக்க என்தலைவா, நீதான் எங்கள்
        துயருற்ற உயிரோடு வாழ்கின் றாயே!
மணியான பாரதத்து நிலத்தில் எல்லாம்
        மன்னவனே உன் சாம்பல்! கங்கை நீரில்
இணைந்தஉன்றன் சிந்தனையின் ஆழ்ந்த போக்கு!
        இப்படியாய் நீ இருக்க ஞாபகம் ஏன்?

காவியத்து நாயகனே! ஓன்று சொல்வேன்!
        கடைசிரத்தம் ஒருசொட்டே உள்ள மட்டும்
ஆவிநிகர் சுதந்திரமாம் சுடரைக் காப்போம்!
        அனைத்துலகில் எங்கேனும் சுதந்தி ரத்தைப்
பாவிமகன் எவனேனும் பறிக்க வந்தால்
        பார்த்திருக்க மாட்டோம்காண்! வங்க தேசம்
ஆவலுற இதற்குத்தான் சாட்சி சொல்லும்
        ஆணவத்தால் அடிபணிந்த காட்சி சொல்லும்!

எட்டடி, நீ பாய்ந்தாய், உன் இளைய வேங்கை
        இன்று, பதி னாறடிகள் பாயக் கண்டு
மட்டற்ற மகிழ்ச்சியிலே ‘இந்திரா’ தான்
        வணக்கமுறும் ‘இந்தியத்தாய்’ என்றே விண்ணை
முட்டுகின்ற புகழ்கண்டாய்! இனிமே லேனும்
        மூன்றுமணி தான் துயின்ற விழிகள் மூடி,
எட்டாத உயர்வு நம்மோர் இந்தி ராவால்
        எய்திடுவார் என்றெண்ணித் தலைவா, தூங்கு!
----------

ஞானம்

(தமிழினத்தின் காவலருள் ஒருவரும் தமிழறிஞமான ம. பொ. சி. யைப் பற்றிப் பாடிய கவிதை)

விடையேறும் பெருமானின் இடப்பாகம் அமர்ந்தருளும்
        வினைமுதல்வி பாலுண்ட ஞானம் - எனப்
படித்தோரும் நுண்ணறிவு படைத்தோரும் தாம் வியக்கும்
படிபேசும் படியாத ஞானம் - தினம்
கடைத்தேறப் புகழ்பாடிக் கடைவாயும் கிழிந்தோடக்
        கடையன்கால் படியாத ஞானம் - சாக்
கடையாகத் தமிழ்பேசிக் கடையாமல் தயிர்காணும்
        கடைத்தூசு படியாத ஞானம்!

இடையின்றி நடமாடக் கடற்செல்வி மறந்தாலும்
        என்தமிழை மறவாத ஞானம் - நாவில்
நடமிட்டுச் சிலம்பாலே புகழ்பாடும் மாதவியின்
        நளினங்கள் அழகுரைக்கும் ஞானம் - மனம்
புடமிட்டுக் காந்தீய வழிநோக்கித் தனைக்செலுத்தும்
        புதுமைவாழ் இலக்கியத்து ஞானம் - கட்சிப்
படமாடும் அரசியல்பாம்(பு) அதைவிட்டால் மறத்தமிழர்
        படைத்தலைவன் ம. பொ. சிவ ஞானம்!
--------

சமயம்

(இந்தச் சமயம் - எங்கு நோக்கினாலும் சமயச் சச்சரவுகள், மீனாட்சிபுரம் பாதிப்புகள், “மதம் மனிதனை மதம் பிடிக்க வைப்பதற்கல்ல. மனிதனை மனிதனாக, முடிந்தால் புனிதனாக வாழ வைப்பதற்கே” என்பதை இவர்கள் ஏன் புரிந்து கொள்வதில்லை?)

வானில் வரம்புடன் வையம், கதிர், நிலா
        வாழப் படைத்த இறை – ஆன்மா
ஊன உடற்பொதி ஊழில் நசிந்திட
        உள்ளே நுழைத்த சிறை – ஆடும்
ஈனப் பிறவியில் ஈட்டும் அருட்குவை
        இம்மை கெடுக்க நிறை – குட
ஞான நிலைச்சுடர் நாதன் திருநிழல்
        நாடல் சமயத் துறை!

மேதை அவன்விதி! மீட்க அவன்கதி!
        வீண்: ஏன் மரண பயம்? – உதிர்பூப்
போதை சிறுநொடி! பூக்கும் மறுபடி!
        பூக்கா டிறைவன் மயம்! - இருட்
பேதை மனப்பொறி பேரின்பமே குறிப்
        பெய்தால் அவன்அ பயம் - மூலப்
பாதை வகுத்தவன் பாதம் அடைந்திடும்
        பாதை பலச மயம்!

ஆக்கிவைத்த மூலமொன்றை அழிந்தபின்னே
        அடைகின்ற நோக்கோடும், அகில முற்றும்
காக்கின்ற பெருங்கருணைக் கடவுளுக்கும்
        கதிர், மழை, தீ காற்றுப்போல் கால மெல்லாம்

தேக்குமின்பம் உயிர் வாழ்வில் திகழ வைக்கும்
        திறமிக்க சக்திகட்கும், சிறப்புக் கொள்ள
ஊக்குகின்ற கல்வி, செல்வம், உயர்ந்த வெற்றி
        உதவுகின்ற பொருட்கெல்லாம் உள்ளன் போடு

அன்புநன்றி செலுத்து தற்கும் ஆதி நாளில்
        அவரவர்க்கே உரியவழி அமைத்தார் ஆன்றோர்!
இன்பவழி நல்குமெழில், இயற்கை அன்னை
        இனியநதி இவற்றினையும் ஏத்தி நின்றார்!
பின்புபல பெரியோர்கள் பிறவி நீங்கும்
        பேரின்பப் புதுவழிகள்; பிறக்க வைத்தார்!
இன்றுபல வழிச்சமயம் இலங்கக் கண்டோம்!
        எல்லாமும் ஓர்இலக்கே எய்தக் கண்டோம்!

தத்துவத்தில் ஊற்றெடுக்கும் தனித்து வத்துத்
        தகைசான்ற இந்துமதம், தழுவும் அன்பு
புத்தமுதாய் வளர் பௌத்தம், புனிதன் ஏசு
        புன்னகையும் மாறாமல் சிலுவை தூக்கி
எத்தனையோ கொடுஞ்செயல்கள் ஏற்றும், “தேவே!
        இவர் செய்த பிழைபொறுப்பீர்” என்று ரைத்து
வித்திட்ட கிறித்துவமும், விளங்கும் இஸ்லாம்,
        வேறுபல சமயமெல்லாம் பிரித்துக் கொண்டு

தத்தமது வழிதனிலே தனிப்பே ரன்பைத்
        தரிசித்தல் தவறல்ல: சமய நோக்கைப்
பித்தரென மறந்துமதம் பிடித்து நாளும்
        பெரியமதம் எமதென்று பேசிப் பூசல்
நித்தமிக வளர்ப்பவர்கள் நீசர்! யுத்த
        நெறிவளர்ப்போர் நரகுலகின் தாசர்! நெஞ்சில்
தத்திவரும் தூய அன்புத் தவத்தில் சீலம்
        ததும்புகின்ற நெறி உண்மைச் சமய மாகும்!

சமயவழி சமத்துவத்தை ஏற்றும் - உலகில்
        சதிராடும் போர் வெறியை மாற்றும் - எங்கும்
அமைதி, அன்பு ஒழுங்குநலம் அமைய வொரு சமுதாயம்
        காட்டும் - உயிர் - ஊட்டும்!
இறைவனது மக்கள் நாம் என்று – மாந்தர்
        எல்லோரும் உறவாடி நின்று – மன
நிறைவான புதுவாழ்வு நெறிகாண வைப்பது தான்
        சமயம் - அதற்கிது – சமயம்.
-------

அழைத்துக்கொள்ளேன்

(சாமுண்டி மலையின் மீது – சத்திய ரூபமாக வீற்றிருக்கும் நித்தியசுந்தரியின் மடியில்,
தஞ்சம் கேட்கும் நெஞ்சின் புலம்பல்)
அருளிருக்கும் நின்னபடியே அபய மென்று
        அவலக்கூக் குரலெழுப்பும் அடியேன் தன்னை
இருளிருக்கும் இடத்தினின்றும் இட்டுச் செல்ல
        இனியார் தான் எவருள்ளார் எனது தாயே!
மருளிருக்கும் பிணிப் பிறவி மாசு நீங்க
        மனம் வைக்க மாட்டாயோ? அழியா உண்மைப்
பொருளிருக்கும் உன்மடியில் கவலை நீங்கிப்
        பொழு தெல்லாம் கண்ணுறங்க அழைத்துக் கொள்ளேன்

மஞ்சுபல கொஞ்சிவரும் மலையின் மீது
        மகிமையுறும் சாமுண்டீஸ் வரியே! அம்மா!
நெஞ்சிலுறும் சஞ்சலங்கள் நெருப்பில் இட்டு
        நீராட்டுகின்றதடி! நினது கண்கள்
துஞ்சினவோ? வஞ்சனையோ? துடிக்க விட்டுத்
        துவைக்கின்றாய்! நகைக்கின்றாய்! அலையில்வீழ்ந்த
பிஞ்சுமனம் வெஞ்சுமைகள் தாங்கா தம்மா!
        பேரின்ப நிழலுக்குள் அழைத்துக் கொள்ளேன்

மாயமடி உன்சிரிப்பு! மர்ம வானில்
        மலர்கின்ற கோடானு கோடிப் பூக்கள்
நேயமெனும் நார்தனிலே தொடுத்துச் சூடி
        நிலவாக எழிற்கோலம் பூண்டு நிற்கும்

தாயன்பே! தனித்துவமே! நீறு பூத்த
        தணலாக உட்கவலை தகிக்கும் ஊமைக்
காயமடி, ஏழைக்குக்; கண்திறந்து
        கரம் நீட்டி அமைதிக்குள் அழைத்துக் கொள்ளேன்?

மாதவமே! சாமுண்டி மலையின் மீது
        மயக்குகிற பூரணமே! எந்த நாளும்
சோதனைகள் நல்லவர்க்கே தொடரும் என்றால்
        தோற்காதோ நீவகுத்த விதிகள் எல்லாம்?
ஆதவன் போல் துன்பஇருள் அகற்றிக் காக்கும்.
        அருள்எங்கே? அன்பெங்கே? மனமும் கல்லாய்க்
காதடைத்துப் போனாயோ? மரண வாயில்
        கதவேனும் திறந்தென்னை அழைத்துக் கொள்ளேன்.
---------

மீனாட்சி!

அருள் மணிவிளக்கே அனைத்துயிர்ப் பிறப்பும்
        அனுதினம் புரப்பதும் நீயே, - மெய்ப்பரம்
பொருளவன் இறைவன் பொருளெலாம் உறையும்
        புனிதனும் உன் மு(ன்)னர்ச் சேயே – காலம்
உருள்வதும், உயிர்கள் உறங்கலும், உடலை
        உதறுதலும் நடத்திடு வாயே – சிறு
கருவினில் உயிர்த்தும் கருவினைச் சுமந்தும்
        கதி தரும் மூலமே, தாயே!

அழிப்பதும் நீயே: ஆக்கலும் நீயே
        அனைத்தும் உன் திருவிளையாட்டு – உயிரில்
செழிப்பதும் நீயே, சிதைப்பதும் நீயே,
        சிரித்திடும், இயற்கை உன் பாட்டு – கதிராய்
விழிப்பதும் நீயே, வீழ்த்தலும் நீயே
        விதி உனது அரும் திறல் பூட்டு – அம்மா,
பழிப்பினில் கிடக்கும் பாவியர் எமக்கும்
        பரிந்துனது அன்பினைக் காட்டு!

காண்டலும் உன்னால்: காண்பதை உணர்ந்து
        களிப்பதும் உன் அருள் மாட்சி - இருள்
தீண்டலும் உன்னால்: தீமைகள் நீங்கித்
        திகழ்வதும் உனது அரசாட்சி – மக்கள்
வேண்டலும் உன்னால்: வேண்டிய பெற்று
        விளங்கலும் ஒருதிருக்காட்சி – எமை
ஆண்டருள் செய்ய அன்புடன் வருக,
        அரன் இடம் அமர்ந்த மீனாட்சி!

வணங்குவோம் பக்தி வழிந்திடும் அன்பு
        மனமெலாம் உருகி உன் வழியே – கண்ணப்ப
இணங்குவோம் எங்கள் இருவிழி தருவோம்,
        எமக்கு ஒளி தருவதுன் விழியே - இருள்
பிணங்கியே கிடக்கும் பிறப்பினை அறுத்துப்
        பெருங்கடல் சேர்ப்பதுன் ஒளியே – தமிழ்
மணங்கமழ் வைகை மதுரையில் எழுந்த
        மாதவமே இளங்கிளியே!

வள்ளிக் குறத்தி மணவாளன்
        வையம் காக்கும் வடிவேலன்
கள்ள நகை செய் தெய்வானை
        காதல்தேவன் அறுமுகனை
அள்ளி உவக்கும் கோமளே,
        அன்புப் பிழம்பே, அருட்கனலே,
வெள்ளி மலையின் தண்சுனையே
        வேதச் சுடரே, அருள் அம்மா!

வித்தே, வேழ முகத்தோனை,
        வென்றிக் களிற்றைத் தந்தசிவச்
சொத்தே, சொக்கத் தங்க எழில்
        சொக்கன் சொக்கும் பாண்டிநாட்டு
முத்தே, மூன்று தமிழ்ச்சாற்றின்
        மூலச்சுவையே, தெய்வமலர்க்
கொத்தே, வைரச் சுடர் நகையைக்
        கொஞ்சம் சிந்தி அருள் அம்மா!

சீர்கள் சிறக்க வரும் அழகர்
        செல்வத் தமக்கை மீனாட்சி!
பேர்கள் பலவாய் - முழு நிலவாய்ப்
        பீடு தரும் எம் திருத்தாயே!
வேர்கள் நீரை உணவாக்க
        வேண்டும் வகைகள் செய்கின்றாய்,
ஆர் கொல் உள்ளார் எமைக்காக்க,
        ஆருயிரே, நீ அருள் அம்மா!

ஆரா அமுதம், அருளும் வதனம்:

வெந்து துயர்ப்புயல் வீழ்த்தி வருத்திட
        வெம்பும் எளிய மனம் - நாடி
வந்து வினைவலி வாதை கெடுத்திட
        வாழ்த்த, கனிந்து தினம் - அருள்
தந்து மனங்குளிர் தந்தத் திருக்கரத்
        தாயே! பெரும்புவனம் - புகழ்
சந்தத் தமிழ்வளர் சங்கப் பெருமைகள்
        சாற்றுவது (உ)ன் வதனம்!

தீராப் பெரும் பிணி தேய வருபவர்
        தென்பில் மலரும் முகம் - பனி
நீராய் உருகிட, நேர்ந்த துயர்களை
        நீக்கி நிறைந்த சுகம் - தரும்
ஆரா அமுதமே, ஆதி முதற்பொருள்
        அன்னை உனது ஜெகம் - புகழ்
தேராய் வலம் வரும் தென்பூந் தமிழிசை
        திகழுவது (உ)ன் வதனம்!

காதல் தலைவி! காவியச் செல்வி!
கலைமலியும் திருமதுரை நின்று – அங்
கயற்கண்ணி எனும் பெயரைக் கொண்டு – கொடுங்

        கலிநீக்கும் கந்தரேசன்
        காதலுறச் சேரும், பூச்
        செண்டு – ஞானக் - கன்று!

முச்சங்க மதுரை மீனாட்சி – அவள்
முக்கண்ணன் உடற்பாதி மாட்சி - மூல
        அச்சாணியாய் உலகை
        அரசாளும் கண் கொள்ளாக்
        காட்சி - இதுவன்றோ – காட்சி

மாடமலி கூடலிலே ஆவி – நிகர்
மகேசனுக்குக் காதல் மலர் தூவி – உடன்

        கூடலுற அபிநயத்துக்
        கோலமுறும் மீனாட்சித்
        தேவி - காணாதோன் - பாவி!

முத்துநகை, தத்துநடை முல்லைமலர்ச் சிரிப்பு:
உயிர்களையே பொம்மைகளாய் உருட்டி ஆடும்
        உலகத்து நாயகியே, ஒளியே வானே!
துயில் கொண்டால் அன்பரைத்தான் துயர்கள் சூழும்
        துவைத்துவிடும் என்றெண்ணித் துயில் மறந்து
கயல் விழிகள் குறுகுறுக்கக் கனிவினோடு
        காற்சதங்கை ஒலிக்கவரும் கனியே, தேனே!
துயர்களையத் தத்துநடை துவள வந்து
        தொல்வினைகள் நீக்குகின்ற சுடர்க்கொழுந்தே!
பேசரிய பெருவாழ்வே! பேரியாழே!
        பிறைசூடும் பெருமானைப் பிணித்து நெஞ்சில்
பாசமுடன் வைத்தவளே! பவளத் தொட்டில்
        படுத்துறங்கக் காத்திருக்கப் பக்தர் தம்மை
நேசமுறக் காப்பவளே! நினைத்த பேர்க்கு
        நினைத்தபடி வடிவெடுத்து நெஞ்சில் நிற்கும்
வாசமலர்ப் பூக்காடே! வானமீதில்
        வந்துலவும் முழுநிலவே! வனத்து மானே!

பொற்சுடரே! விண்மீனே! பொங்கிப் பாயும்
        புதுவெள்ளப் பெருக்கே, தென் பொதிகை விட்டுக்
கொற்றமுற மதுரை நகர் குலுங்க வந்த
        குளிர் தென்றல் காற்றே, பூங்கொடியே, ஞானக்
கற்பூரப் பெட்டகமே! கடைக்கண் காட்டிக்
        கதிநல்கும் பெருமாட்டி! காவியத்து
நற்றமிழில் உலவுகின்ற நளினச் செல்வி!
        நகைசிந்திப் பேரருளை நல்குவாயே!

தமிழாக நின்றவள்:

திருமலை மன்னன் திருமடி தன்னில்
        திகழ்ந்தனை, சந்தனக் காடே! – கவிக்
குருபரன் முன்னே குழந்தையாய் நின்று
        குளிர்முகம் மலர்தமிழ் ஏடே! – அருட்
தருவென வளர்ந்து தகித்திடும் பிறவித்
        தவிப்பினை மாற்றுவாய் நாடே – நின்
திருவடி மலரில் தினம் தினம் வீழ்ந்து
        தேசுறும் நலமுற நீடே!

அங்கயற்கண்ணி ஆலவாய் தன்னில்
        அருளுவ(து) எங்களின் தவமே – தெய்வச்
செங்கனி இதழில் குறுநகை சிந்திச்
        சிறுநடை பயில்தரி சனமே – தர
எங்களின் முன்னே இனித்திடும் மழலை
        இசைத்திட வா, ஒரு தினமே – மலர்ப்
பங்கயப் பாதம் பணிந்திட லன்றிப்
        பணியில்லை, கவினுறு வனமே!

வெண்பனி இமய வெற்பினில் தவழும்
        வித்தகியே சிறுபிள்ளைத் - தளிர்க்;
கண்மணி வருவாய்! காவிய வடிவாய்!
        கனித்தமிழ் மிழற்றிடும் கிள்ளை- எனப்
புண்படும் நெஞ்சைப் புத்தமு தளித்துப்
        புரந்திட வருகவே! கொள்ளை - இடும்
பன்படு முறுவல் பாங்கினை உண்டு
        பருகுவோம் குழல்மொழிக் கள்ளை!

தாயாகி வந்தவள்:

கந்தவேள் அரனிடம் கணபதி வயிற்றினைக்
        காட்டியே, “அந்த மத்தளத்தைக்
கணமெனக் கருளுக: கைகளால் தட்டிநான்
        களிப்புற வேண்டும்” எனக்குறும்பு
சிந்திடச் சொல்லவும் சினமுறும் ஐங்கரன்
        சிவந்திடும் விழியால் “மலைதனிலே
தினைப்புனம் திரிந்திடும் சிறுகுற வள்ளியைத்
        தேடிய சிறுவா!” என நெருங்கி.

வந்திடக் குகனவன் வலியவே வீம்புடன்
        ‘வா, உனக்கென்ன இரு கொம்போ?
மத்தள வயிறுகொள் மதமுறு வேழமுன்
        வாகனந் தன்னை என் மயிலால்
தொந்தர வளித்து அதைத் துரத்திடுவேன்” எனத்
        துள்ளிட, இருவர் கோபத்தைத்
துளியுமே இன்றி நல் தூயபேரன்பினால்
        துடைத்திடும் உலகின் முதல்தாயே!

திருவிளையாடலாய்த் தினம்தினம் பக்தரைத்
        திணறிடவைக்கும் பரம்பொருளை
தேன்சொரி பூங்குழல் தேவிநீ, “அன்பரைத்
        திகைத்திட வைத்தல் நிறுத்துக” எனக்
கருணையாய்ச் சொல்லவும் கங்கையைக் குடுமியில்
        காத்திடும் தேவன் சினங்கொண்டு
கடுமையாய், ‘வஞ்சகக் கள்வனின் தங்கையே!
        கல்மனங் கொண்டு பாரதப் போர்ப்

பொருகளந் தன்னிலே பொய்மையால் உயிர்களைப்
        போக்கிய கண்ணன் பரம்பரையா,
போதனை செய்வது புதுமையாய்க் கருணையை?
        போ” எனச் சொல்ல, பித்தருடன்
ஒருப்படுமா உள்ளம்? உங்களின் விருப்பென
        ஊடிடும் கருணைப் பெருமுகிலே!
உன்மலர் பாதமே உறுதியை நல்கிடும்
        உலகின் ஒளியே, மெய்வழியே!

எழில் மதுரை ஆளும் ஏந்திழை!

தித்திக்கும் முக்கனியே! திகட்டாத பேரருளைத்
        தினம் நல்கும் அன்பு வடிவே!
முத்திக்கு வழிகாட்டும் மொய்குழலே மெய்ஞான
        முதற்பொருளே ஊழி முடிவே!
பக்திக்கே உருகிவரும் பனிமலையின் இளமானே,
        பவளமணித் தேரே, தமிழே!
எத்திக்கும் புகழ் மணக்க எழில் மதுரை ஆளுகின்ற
        ஏந்திழையே, தந்தச் சிமிழே!

நாரணன் தன்சோதரியே? நம்பிக்கை கொண்டவர்க்கு
        நல்லாசி கூறி, அருளே
பூரணமாய்ப் பொழிகின்ற பொன்முகிலே, கடைக்கண்ணால்
        போக்கிறாய் ஆன்ம இருளே!
தாரணியில் உயர்மதுரைத் தலந்தன்னில் கோலோச்சித்
        தவிர்க்கின்றாய் எங்கள் சுமையே! - இமய
வாரணத்தை மணங்கொண்ட மடப்பிடியாம் மீனாட்சி
        வடிவான தேவி உமையே!

அடிசேர மறந்தாலும் அன்போடு மடிசேர்க்கும்
        அணையாத தீப ஒளியே!
படிசேர மறந்தாலும் பாசமுடன் தேடிவந்து
        பக்தரொடு கொஞ்சுங் கிளியே!
இடிசேர மின்னலிட்டு இயற்கை எனக் காணுகின்ற
        எப்பொருளும் ஆகி எமையே
மிடிசேர ஒட்டாமல் மென்னகையால்; காப்பளிக்கும்
        மீனாட்சி அன்னை உமையே!

அண்டவெளி அனைத்தையுமே அணுவளவும் பிசகாமல்
        அனுதினமும் சுற்றும் இயக்கம்
கொண்டவளே! நின்பாதம் ஒன்றேதான் தஞ்சமெனக்
        கொள்ள எமக்கென்ன தயக்கம்?
பிண்டத்தை விட்டஉயிர் பின்சென்று சேருகிற
        பெருங்கடலே, மாயச் சுழலே!
மண்டலத்துக் கதிநல்கும் மதுரைவளர் மீனாட்சி
        மறைப்பொருள் உன்பாத நிழலே!
---------

மனமே, அட மனமே!

வான் முகட்டில் ஏறி, அந்த வட்டநிலா தொட்டு வந்து
நான்முடித்த சாதனையில் ‘நான்’ என்று இறுமாந்தேன் !
உலகளந்தேன்; என்னுடலில் ஒளிந்திருக்கும் உன் ஆழம்
அலகிட்டு அளப்பதிலே அய்யோ, நான் தோற்று விட்டேன்!

சீறிவரும் பேராறும் சிங்கமுடன் பிறவிலங்கும்
மீறாமல் அடக்குகிறேன், மேனியிலே ஆறடிக்குள்
அடங்குவதாய்ப் பாவனையை ஆக்கிவிட்டு எனைத்தன்னுள்
முடக்கிவிட்ட மனமே, உன் முரண்டுதனை அடக்குதற்கு

ஆனமட்டும் பார்த்துவிட்டேன், அதில்மட்டும் தோற்று விட்டேன்
வானமெல்லாம் ஓர்நொடிக்குள் வலம்வரவே ஏவுகணை
அமைத்தேன்நான், ஆனாலும் அப்படியே நானிருக்க
இமைப்பதற்குள் அண்டவெளி எங்கெங்கும் என்னுள்ளே

இருந்து கொண்டே சுற்றிவரும் ஏ, மனமே உன்வேகம்
மருந்துக்கும் இல்லை, என் மண்ணான கருவிகளில்!

இயற்கையினை வென்றதாக எண்ணியதும் உன்னிடத்தில்
செயற்கை யெனக் கண்டு விட்டுச் சிரிக்கின்றேன் அசடாக!

ஏ மனமே !

என்னுயிரை உடலை நீஇஷ்டம்போல் இழுத்துச்
சொன்னபடி கேட்கவைத்துச் சூதாட்டம் நடத்துகிறாய்!
உன்னுள்ளே ஒன்றுவைத்து உதட்டினிலே வேறென்றைப்
பின்னவிட்டு நடிக்கின்றாய், பிடிவாதமாய்க் கண்ட

பொருளெல்லாம் கேட்கின்றாய், போதாமல் ஆசையென்று
நெருப்பினையும் மூட்டி, அதில் நெளிகின்றாய், துடிக்கவிட்டு!
இருப்பதனை எண்ணாமல் இல்லாத ஒன்றெண்ணி,
வெறுப்பான நினைவுகளை வேண்டாத நேரத்தில்

கொண்டுவந்து நிறுத்துகிறாய் ! கூசாமல் மனச்சாட்சி
கண்பிதுங்கச் சாகுமாறு கயமைவலை பின்னுகிறாய்!
நீயே, உன் செய்கையிலே நிம்மதியைக் கொன்றுவிட்டு
நோயால் துடிப்பதேன்? நொந்து மாய்வதேன்?

        இப்படிக்கு,
        “மனிதன்”
-----------

அட போடா மனிதா !

உனை, ஆட்டி வைப்பதாக உரைத்தாய், நானோ
        வினை ஆட்டி வைக்குமொரு கருவி யென்று
நினையாமல் போனாய், போ! புதிய பூவாய்
        நீமலர்ந்த போது, தெளி நீராய் நானும்
புனிதமுடன் தானிருந்னே;, சூழலாலே
        பொய்மைகளின் தீனியிலே மேய நேர்ந்தால்
கனியாமல் அழுகிடுவேன், செயல்கள் எல்லாம்
        கயமைதர நச்சுமரம் ஆகி நிற்பேன்!

கடிவாளம் இல்லாத புரவி யாகக்,
        கடும்புயல்கள் வீசுகின்ற கடலு மாகப்
படிவங்கள் பல எடுப்பேன் ; பாலை ஆவேன் ;
        பண்பான சூழலிலே, அறிவின் மாட்சிக்
கொடிபறக்கும் இடத்தினிலே வெம்மை நீக்கும்
        குளிர் நிழலாய் நானிருப்பேன் ; பொறுமை கொள்வேன்
நெடும்அலைகள் அமைதியுடன் உறவு சொல்லும்
        நீர்நிலைபோல் நினைவலைகள் தந்து நிற்பேன்!

        இப்படிக்கு,
        “மனம்”
-----------------------

உலர்ந்த மலர்

விலைபோகும் பொருளொன்று இருக்கும் மட்டும்
        விதவிதமாய் நுகரவந்து உறவு சேரும்
நிலைபோகித் தெருப்புழுதி சொந்தம் கொண்ட
        நேரத்தில் கூடஇந்த மலரால் நெஞ்சம்
அலைமோதி நெக்குருகச் சிரிக்கக் கூடும்
        அதிசயத்தை என்னவென்று சொல்வேன்! ஓஹோ!
தலைஎழுத்தின் கணக்குகளைக் கூட்டிப் பார்த்துத்
        தனக்குள்ளே நகைக்கிறதோ? அன்றி வாழ்வின்

விடிகாலை அஸ்தமனம் இரண்டின் ஊடே
        விரிகின்ற பெரும்பிளவில் - விதியின் ஆட்டம்
வடிக்கின்ற சுருக்கங்கள் ஒவ்வொன் றுள்ளும்
        வளையவரும் சுழல்களைத்தான் எண்ணிப் பார்த்து
முடித்துவிட்ட பூரிப்பில் பொக்கை வாயை
        மூடித்தான் நகைக்கிறதோ? நசுக்கி ஏறி
முடமாக்கிப் போடுகிற காலத் தேரின்
        மூர்க்கந்தான் அம்மம்மா! கொஞ்சம் அல்ல!

செடியோடு அரும்பாக இருந்த நாளில்
        சிறகடிக்கும் கனவுகளைக் கட்டிப் போட்டு
படிப்படியாய் ஆசைகளை வளர்த்துக் கொண்டு
        பருவத்தின் பூரிப்பில் தளதளத்து
படைப்புகளின் அர்த்தங்கள் கிசுகிசுத்த
        பாடத்தில் ‘களுக்’கென்று சிரித்த வேளை
வெடித்தஎழில் ரகசியத்தின் மெருகி னாலே
        விழிஇமைக்க மாட்டாமல் ரசித்த வண்டின்

விளையாட்டை நினைத்துத்தான் சிரிக்கு தாமா?
        வெட்கத்தால் சிவக்கின்ற இதழ்கள் மீது
கிளைவிரித்த உறவுகளின் சங்க மத்தில்
        கிளுகிளுத்த கதைநினைத்துக் கிறங்கு தாமா?
பளிச்சிட்ட நிலைமாறும் முன்னே, கிள்ளிப்
        பறித்த கரம் தன்னோடு போயிருந்து -
தெளித்திட்ட அனுபவங்கள் நார்கள் ஆகிச்
        சேர்த்தசரம் தனில் இருந்து வாழ்ந்த காலம்

மலைஏறிப் போனதென விரக்தியோடு
        மாயநிலை தனைஎண்ணிச் சிரிக்கு தாமா?
சிலைஅழகுப் பெட்டகத்தின் கூந்தல் மீது
        சிருங்கார மணம்தந்து படுக்கைப் பாடம்
‘அலை’ அடித்த பின்தெருவில் வந்து வீழ்ந்து
        அருவருப்பில் தொடங்குகிற உலகம் பார்த்த
நிலைநினைத்துத் தானிந்த மலர்முகத்தில்
        நெளிகிறதா புன்சிரிப்பு? இல்லை, அந்த

இறைவனடி தொழும்அன்பர் கரத்தில் சேர்ந்து
        எம்பெருமான் பாதமலர் அலங்கரித்து -
கறைபடிந்த மனக்குறையைத் துளசித் தீர்த்தம்
        கழுவுகிற சந்நிதியின் சாந்தம் கண்டு
பிறப்பெடுத்த பலன்கண்டோம் என்றே எண்ணிப்
        பெருமையிலே விரிந்ததுவா புன்னகைதான்?
குறைகுடமாம் அசடொருவன் காதில் பூவாய்க்
        கொஞ்சமேனும் அனுபவிக்கப் படாதிருந்த

வெறுமையின் சிரிப்பிதுவா? செடியை விட்டு
        வேறிடமே செல்லாமல் காலமெல்லாம்
சிறைப்பட்டுச் சீந்தாமல் கிடந்திருந்த
        தீ மூட்டும் ஏக்கங்கள் சுமைகளான
வெறியினிலே பித்தான சிரிப்புத் தானா?
        வியாபார மனம்கொண்ட ஒருவன் கையில்
அறைபட்டுச் சாறெல்லாம் அத்தர் ஆகும்
        அவலத்தில் சிக்காமல் பிழைத்தோம் என்று

தலைதப்பி வந்ததொரு சிரிப்பா? போலித்
        தனமான நாகரிக வேடம் போடும்
அலங்காரப் பதுமையென மாடி வீட்டில்
        அசையாமல் ஜாடியிலே வீற்றிருந்த
நிலை, வாடிப் போனதனால் மாறிப் போக
        நித்திரைதான் கொள்வதற்கு வீதி வந்து
அலங்கோலம் பட்டபல அனுபவத்தின்
        அழுத்தமான தத்துவத்துச் சிரிப்பா? என்று
சிந்தித்த மனம் இந்த மலரின் போதைச்
        செழும் இதழ்கள் நெருப்பாக மலர்ந்த வேளை

எந்தவகை அழகோடு பொலிந்திருக்கும்
        இனியமனம் கமழ்ந்திருக்கும் என்றே எண்ணிப்
பந்தங்கள் மாயவலைச் சூழலுக்குள்
        பரிதவிக்கும் நிலைக்காக வருந்திற்றம்மா!
இந்தமனம் நினைத்தழுது பயன்தான் என்ன?
        எல்லாமே ஓர் ஒரு நாள் உதிரவேண்டும்?
உலர்ந்தமலர்……. போகிறது போங்கள், இந்த
        ஒருமலர்க்காய்க் கண்ணீரை வடித்தோமென்றால்
உலகத்தில் தினந்தோறும் உலர்ந்து வீழும்
        ஒவ்வொன்றின் நிலைகண்டும் வடிக்கக் கண்ணீர்

அலைகடலின் அளவன்றோ வேண்டும்? முன்னே
        அதுபோனால் நாம்நாளை! முடிவை வெல்லும்
கலையறியும் நாள்வரையில் கண்ணீர் தன்னைக்
        கையிருப்பு வைத்திருப்போம்! காலம் மாறும்!
----------

நெஞ்சம் - ஒரு மயானம்

இதோ, எனது நினைவொன்று
        எரிகிறது நெஞ்சமெனும் மயானத்தில்!
இதுகாறும் அதைத் தொடர்ந்த
        ஏக்கங்கள் சிதைமூட்ட – விரக்தியெனும்

தீ நாக்கு கொழுந்துவிட,
        திகைப்பென்ற நெய்யூற்றி எரிகிறது!
வாழ்நாளில் இதுவரையில்
        வகையற்றுச் செத்தொழிந்த நினைவுகளின்

அடையாளச் சின்னங்கள் -
        அங்கங்கே சமாதிகளாய் நின்றிருக்க
அடையாளம் தெரியாமல்
        அரசாங்கப் பேரூந்தாம் விதிநசுக்கி

உருக்குலைந்து தலைசிதறி -
        உறவுகளை வளர்த்திருந்த நினைவொன்று
பரிதாபக் கோலத்தில்
        பாசத்தின் மோசத்தில் எரிகிறது!

பழம்நினைவாம் பிணம்புதைத்த
        படுகுழியைத் தோண்டுவதற்கு, ஞாபகமாம்
கிழ நரிகள் வட்டமிட்டுக்
        கெட்டொழிந்த பிணம் சுவைக்கும் ஆசையுடன்

ஊளையிடும் இருள் நேரம்
        ஓ, எனது நினைவங்கே எரிகிறது!
நாளைக்கு எது முடிவோ?
        நாடகமோ, எனக்கென்ன புரிகிறது?

முன்னாளில் செத்தொழிந்தும்
        முடிவுறாத ஆசைகளால் வெறி பிடித்து
இன்னும் என் நெஞ்சுக்குள்
        எகிறிவரும் பலநினைவுப் பேய்களெல்லாம்

இறைச்சலிட, பீதியிலே
        எதுசெய்வ தெனத்தெரியாத் தடுமாற்ற
இருள்கவ்வி எனைச் சூழ
        இதோ நினைவுப் பிணமொன்று எரிகிறது!

புனைவிரித்த மடல் போல – கற்
        பனை விரித்த கனவுதனை விதவையாக்க
வினை விரித்த வலைதன்னில்
        வீழ்ந்துவிட்ட நிலைஎனக்குத் தெரிகிறது!
---------

நெருப்புக் காடுகள்

(அவன் - அவளை உயிருக்குயிராகக் காதலித்தான். விதி – அவள் மற்றொருவனுக்கு மாலையிட்டாள். விளைவு- அவன் பைத்தியமானான். பாவையின் வீடறிந்து பவனி வந்தான். நம் காதல் கதை இவன் மூலம் நம் கணவருக்குத் தெரிந்து விடுமோ என்று அஞ்சிய அவள் - பைத்தியத்தை அழைத்தாள், பாசத்தோடு (வேஷத்தோடு). நஞ்சு கலந்த சோற்றை அந்த நல்லவனுக்குக் கொடுத்தாள். பின் என்ன? காதல் என்ற நெருப்புக் காட்டில் அவன் எரிந்து நீறாகிப் போனான்.)

அதிகமடா வெயிற்கொடுமை என்று பல்லோர்
        அனுதினமும் ஏசுவதைத் தாங்கேன் என்று
கதிரவனாம் வானத்து நெருப்புக் கோளம்
        கடலினிலே கோபித்து வீழ்ந்த நேரம்.
புதிர்போடும் தாரகைகள் - தூரக் காட்டில்
        புன்னகைக்கும் நெருப்புத், தீப் பிழம்பு போலச்
சுதிகுறைந்து தென்படுதல் போலி ருக்கத் -
        துலங்கியது வானமென்னும் நெருப்புக் காடு!

எத்தனையோ முறை, வான் நெருப்புக் காட்டில்
        எரிகின்ற கதிர்க் கோளம் வந்து போயும்
பித்தாகி ‘அவள்’ வீட்டு வாசல் முன்னே
        பெருங்காடு முக உருவம் நகர வில்லை.
        (தாடி)
சித்துவிளை யாடும்பூக் காடாய் நெஞ்சில்
        சிரித்தவளை, அக்கினி சாட்சியாக மாற்றான்
கொத்தியதால் மணம் என்ற நெருப்புக்(கு) ஆடும்
        கொடியவள் தான் இருந்தநெஞ்சில் ஒரேவேக் காடு!
தள்ளி நின்றால் குளிர்கொல்லும்; நெருங்கி வந்தால்
        தகிக்குமவள் நினைவென்ற நெருப்புப் பற்றி
உள்ளமென்னும் புதர்க் காடு நெருப்புக் காடாய்
        ஓலமிட அவன் சோர்ந்தான்; அவளும் வந்தாள்
அள்ளும் சந்தனக் காடாய் நின்றாள்; சென்றாள்,
        அவன் பார்வை நெருப்பெரிந்து நெருப்புக் காடாய்!
கிள்ளுகின்ற பழங்காதல் இவனால் ஏதும்
        கிளம்பிடுமோ இடைஞ்சலென நினைவில் ஆழ்ந்தாள்!

சிந்தனையைப் பயமென்ற நெருப்புப் பற்றித்
        தீக்கனலைக் கசக்கியது; முடிவு கண்டாள்.
மந்தார முகத்தோடு, மருந்தைச் சோற்றில்
        மயக்குமொரு புன்னகையும் சேர ஊற்றி
வந்தாள்; அவ் வப்பாவி புதையல் கண்ட
        வறியவன்போல் காதலியைக் கண்ணால் உண்டான்.
தந்ததையும் பிசைந்தவளே ஊட்ட உண்டான்
        தன்நெஞ்சில் அவள் கையைச் சேர்த்துக் கொண்டான்.

விக்கலொன்று ! அவள் கையால் தண்ணீர் ! பின்னர்
        விழிசெருக அவன் சாய்ந்தான் ! சுடலைத் தீயின்
நக்குகின்ற நாக்குக்குப் பலியாய் மாற
        நால்வர்தோள் மீதுசென்றான்! பழைய காதல்
துக்கமென்னும் மெழுகுருகி வெப்பக் கண்ணீர்
        சொட்டியது! அவனுடலின் நலத்தைக் கேட்ட
சொக்கப்பன் அவள்பயமும் எரித்தான்! மூச்சு
        துருத்திஉலை ஆகநின்றாள் நெருப்புக் காடு!

பருவமென்னும் எழிற்காடு, காதல் என்ற
        பசிமிக்க நெருப்பாலே நெருப்புக் காடாய்
உருமாறி, வேக்காடு நெஞசைப் பற்ற
        ஓலமிட்டுச் சாhக்காடு போம் வரைக்கும்
தெருத்தெருவாய்த் திரிந்து, ‘காதல் தோல்வி’ என்னும்
        சிதைச்சாம்பல் ஆனபல பேரின் காதல்
மருமத்தைத் தாரகைகள் துடித்துச் சொல்ல
        வாடியது வானமென்ற நெருப்புக் காடு!
--------

மாணவர் வாழ்வில் காதல்!
(கவியரங்கக் கவிதை)

(இந்த கவிதை, கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் எழுதப்பட்டதாகையால், சக மாணவன் என்ற முறையிலே உரிமையோடு சற்றுக்காரமாகவே எழுதியிருப்பேன். மாணவ நண்பர்கள், இதனைத் தோழமை உணர்வில் எடுத்துக்கொள்ள வேண்கிறேன்).

தற்கால மாணவரின் விளையாடல்கள்
        தவிப்போடு நினைத்திருந்தேன், அந்த வேளை
முற்கால உடையோடும் இருவர் வந்து
        முன்நின்றார், யாரென்றேன், கவிதை வானில்
பொற்காலம் கண்டதமிழ் ‘கம்பன் மைந்தன்
        புகழ் அம்பிகாவதிநான்! எவரிடத்தும்
கற்காத காதலெனும் புதிய பாடம்
        கற்பித்த இவள் அமராவதியாம் ராணி!

சந்தித்தோம் மாணவராய் இருக்கும் வேளை!
        சாவுவரை வந்தகாதல் புரிந்தோம்! நாங்கள்
எந்தையிடம் மாணவராய் இருந்த தாலே
        இன்றைய நாள் மாணவர்கள் காலத்தாலே
எந்தநிலை மாறியுள்ளார்? அவரின் காதல்
        எத்தகைத்து? போன்றவற்றைக் கேட்பதற்கு
வந்துள்ளோம் ஏற்றவன் நீ, என்பதாலே!’’
        வந்தவரில் ஆண்சொன்னான் நான் திகைத்து,

“கேலிக்கு நான்தானா கிடைத்தேன்! இங்கே
        கீர்த்தியுடன் பேருந்து நிலையம்; தோறும்
காலைமாலை தவம்செய்தும், காதல்பற்றிக்
        கற்பதற்கும் நேரமின்றித் தினமும் ஆய்ந்து,

வாலிபத்தில் காதலிக்க வழிகள்’ நூலை
        வரி விடாமல் கரைத்தவரும் இருக்கும் போது
கூலிக்கு மாரடிக்கச் சொன்னீர்! நன்று,
        கூலியொன்றும் கேட்கமாட்டேன்: மாணவன் யார்?

வந்திங்கே பிறந்திட்ட எவனும் என்றும்
        வாழ்க்கையிலே மாணவன் தான்! இருந்தபோதும்
“பிந்திவந்து, ‘விபரீதப்’ புத்தகங்கள்
        பெஞ்சுக்குக் கீழ்வைத்துப் படித்திருந்து
விந்தையான தாலாட்டாய் ஆசான் கூறும்
        விரிவுரையைத் தாம்எண்ணிப் ‘பானின்’ காற்றில்
சுந்தரமாய்த் துயில்பவனே மாணவன் காண்!’’
        சொல்லிவிடும் வகுப்பறைகள்! இத்தகையோர்,

காதலைப் பொழுது போக்கென்பார் - சேலை
        கண்டதும் பின்னே சுற்றிவந்து – ஒரு
மோதலில் சுகமும் காணுகின்றார்! – எங்கும்
        முறைக்கும் விழியொடு திரிகின்றார்! – சில
மாதரும் தீனி போடுதல் போல் - தினம்
        மயக்கித் தளுக்கி வலைவிரித்து – தன்பின்
பேதமைக் கூட்டம் தொடர்வதையே – கண்டு
        பெருமை அடையும் நிலைகண்டால்

வேதனை கொள்ளும் தமிழ்நெஞ்சு! - இங்கு
        வேடிக்கையான காதல்பல! – உலக
சாதனை என்றே காதலியைத் - தன்
        சந்தர்ப்பம் போலே மாற்றுகின்ற – பெரும்
சோதனைக் களங்கள், மாணவர்கள் - இன்று
        தோன்றும் காதல் நாடகங்கள்! – அந்த
வேதனின் திருவிளையாடல் எல்லாம் - இக்காதல்
        வேந்தரே தந்த பிச்சையென்பேன்!

எல்லையில்லா வியப்போடு கேட்டிருந்த
        இருவருக்கும் நான் சொன்ன நிலைமை பற்றி
நல்லதொரு தெளிவில்லை: புரியவில்லை!
        நானதற்கு வழியொன்று சொன்னேன்!’’ நீவிர்
வெல்லமெனக் கருதுகின்ற காதல் இங்கே
        எள்ளளவும் இல்லை: எல்லாம் கொல்லும் காதல்!
சொல்லுவது புரியவில்லை எனில் உமக்குச்
        சுற்றிஇந்த நகர்க்காதல் காட்டுகின்றேன்!’’

என்றுரைத்தேன்: சரியென்றார், என்றன் பின்னே
        எழில் அமராவதி மார்புக் கச்சையோடு
இன்றுநகர் வீதியிலே வந்து விட்டால்,
        ‘இன்றையநாள் நாகரிகம் இதுவே போலும்
என்றெண்ணி நாளைமுதல் மாணவியர்கள்
        இதுபோலே கச்சையுடன் வருவார், அய்யோ!
நன்றல்ல: நாடுகெடும் என்றே எண்ணி
        நான்எனது சட்டைஒன்றை அவட்குத்தந்து

போடவைத்தேன்;: அவள்வியந்தாள்: “ஆணின் சட்டை
        போடுவதும் அழகாமோ?” என்று கேட்டாள்
மூடிவைத்துப்பயனுண்டா? இந்த நாள், கண்
        மூடிவளர் நாகரிகப் போக்கைச் சொன்னேன்!

“ஆடவர்க்கும் பெண்டிற்கும் பேதமில்லை!
        அளவேதும் துணிகளுக்குத் தேவையில்லை!
போடுவது ‘புதுப்பேஷன்’ ஆகிப்போகும்!
        புதுமைஎன்று காட்டுவாசி ஆகுகின்றோம்.

இவ்வணம் எடுத்துரைத்து – நம்
        இழிநிலைக் காதலை அவர்காண
கவ்விடும் இறுக்க உடை – புகை
        கக்கிடும் வெண்சுருட்டுடன் நின்று,
மாணவர் தவம் செய்யும் - பஸ்ஸ்டாப்
        வரிசையில் அவரையும் நிறுத்திவைத்தேன்!
ஆணவத் தோடொருத்தி – அங்கே
        ‘அடக்கமா அதன்விலை என்னவென்று

கேட்பதாய் நின்றிருந்தாள் - மாணவர்
        கேலியில் மகிழ்ச்சியும் கண்டிருந்தாள்
வேட்கையோ டவள்பின்னே – எலும்பு
        வேட்டைக்குக் கறிக்கடை நாய்களெனக்

கூட்டமாய்ச் சிலர் நின்றார் - விழி
        கூட்டியே அபிநய பாவத்துடன்
நாட்டமாய்ப் பலதடவை – அவள்
        நாணமே இன்றியும் பார்த்திருந்தாள்.

‘அண்ணலும் நோக்குகின்றான் - அந்த
        அழகியும்நோக்கினாள்” எனக்கம்பன்
பெண்ணினப் பெருமைசொன்னான் - இங்கொரு
        பெண்பல பேர்களை வேட்கையுடன்

நோக்குதல் எடுத்துரைத்தேன் - அந்த
        ‘நூதனக் காதலர்’ அமராவைத்
தாக்கினர் விழிகளினால் - ஒரு
        தடியனோ இதுஒரு அஜந்தாவின்

ஓவியந் தானென்றான் - மற்றுமோர்
        ஒல்லியோ ‘எழுபது மதிப்பெண்கள்,
பாவந்தான் போடென்றான் - கொல்லெனப்
        பக்கத்து நின்றவர் சிரித்துவிட்டார்.

அம்பிகா, அமராவோ - இதை
        அத்தனை பொருட்டாய் மதிக்காமல்
பொம்மையாய் நின்றிருந்தார் - அந்தப்
        போதொரு மாணவன் அமராவை

உரசியே தள்ளிவிட்டான் - உடன்
        உறுமினான் அமரா வதிகொதித்தே!
‘அரசியைத் தள்ளினையோ – அட,
        ஆரங்கே வாளினை எடுத்திடடா”

என்றுபோர்க் களங்குதித்தான் - நான்,
        இதைப் பெரும் பாடுபட்டு அடக்கிவைத்தேன்
பின்னொரு பெண்ணங்கே – உயர்
        பெண்மையின் குணத்துடன் வந்துநின்றான்.

‘பைங்கிளி வந்ததென்றான்’ – அந்தப்
        பாவியர் கூட்டத்து உளறுவாயன்.
‘எங்களின் தெருப்பிள்ளை - இவள்
        என்னவள்’ என்றொரு பொடியன்வந்தான்

‘அஞ்சுகம் சுகந்தானா?” என்று
        அங்கொரு பாடகன் முணு முணுத்தான்
மிஞ்சியே ஒருவ(ன்) அவள் - காலை
        மிதித்தனன் ‘எப்படி’ எனச்சொல்லி!

அன்னவள் நடுநடுங்கி – ஓநாய்
        அத்தனை இருப்பதால் பயந்தவளாய்
மென்னடை நடந்துசென்றாள் - மிக
        வேதனையோடவள் செல்கையிலே

காகித அம்பாலே – ஒருவன்
        கன்னியின் கூந்தலில் பாய்ச்சுகின்றான்
வேகமாய் அவள்நடக்க - இவர்
        விசிலுடன்’ அவளையே தொடர்ந்துவிட்டார்!

நல்லடக்கம் கொண்டுநிற்கும் நங்கையரை, ஓடஓட
        நாய்கள் எல்லாம்
நில்லாமல் விரட்டுதல்போல் நெருங்கிவந்து தொல்லை செய்வார்
        நிறைவாம் காதல்
இல்லையிங்கே! அங்கொன்றும் இங்கொன்றும் நல்லகாதல்
        இருந்தபோதும்
சொல்லாமல் அவைபிரியும்! சோதனைகள் வந்தாலும்
        சொர்க்கம் நல்கும்.

என்னுயிரே உனைப்பிரியேன்’ எனச்சொல்லி உடன்வருவார்
        இருவர்: அங்கே
மின்னலெனப் பேருந்து வேகமுடன் இடைப்பட்டால்
        விட்டு விட்டுச்
சொன்னதெல்லாம் மறந்தோடித் தொலைவினிலே நின்றிருப்பார்;
        சுவையாய்க் காதல்
அன்னமுடன் மகிழ்ந்திருப்பார், அன்னவளோ முகமெல்லாம்
        அம்மை நோயால்

அழகுகெட்ட பின்வந்தால் ‘அய்யய்யோ! உன்னோடு நான்
        அன்பாய்ப் பேசிப்
பழகியதோ உண்மைஎனில் பாவையுன்னைக் காதலியாய்ப்
        பார்க்கவில்லை!
ஒழுக்கமுள்ளேன், உடன்பிறப்பே’ ஒதுங்கிடென்று தானறியா
        ஒழுக்கம் பற்றி
அழகியதோர் உரைசெய்வான், அவன்கையில் காதலின்றோ
        அழுகி நாறும்!

கற்றிட வருவோர் சுற்றியே திரிவார்
        காமம் தலைக்கேறி! – அதைக்
        காதல் எனக்கூறி!

பெற்றவர் அவர்க்காய் உற்றிடும் துயரம்
        சற்றுமே தாம்நினையார் - சேலை
        மட்டுமே தாம்நினைவார்!

காதலைப் பெண்ணின் மோதலாய் எண்ணிக்
        கழுதையாய்த் தாம்திரிவார் - பார்வை
        கழுகெனத் தாம்புரிவார்?

மாதர்பின் ஓடும் போதையில் காதல்
        மாட்சியைத் துவைக்கின்றார் - எங்கும்
        காட்சியே சுவைக்கின்றார்!

மகிழ்ந்திட ஒருத்தி! மணந்திட ஒருத்தி
        தயங்கினால் நுகர்கின்றார் - புதுமலரில்
        மயங்கினால் நகர்கின்றார்?

நுகர்ந்தவள் கொதிக்க, மணந்தவள் தவிக்கப்
        புகழ்ந்தே குழிபறிப்பார் - காதலை
        மகிழ்ந்தே அதில் புதைப்பார்,

என்றுநான் விளக்கிச் சொன்னேன்!
        என்னவர் கல்விக்கூடம்
சென்றுதாம் காதல் செய்து
        திரிவதாய்ப் படம்எடுத்தே
இன்று(ள்)ள திரைத்துறையோர்
        இயற்றிடும் கதைகள் கண்டே
குன்றினர் மாணவர்கள்!
        குறைமுற்றும் அவர்மீதில்லை!

திரைப்படக்காதல் போலே
        செய்திட எண்ணி இங்கே
உருப்படா வழியில் சென்றார்’
        உள்ளவை யாவும் போலி,

துருப்பிடித்தகாதல் என்று
        சொன்னாலோ, எனது தோழர்,
‘திருப்புகழ்க் காதல் தன்னைத்
        தெளிவின்றிப் பழித்தாய்’ என்று

வெஞ்சினம் கொண்டே என்னை
        விரட்டுவர்’ அதனால் இங்கே
கொஞ்சிடும் இனியகாதல்
        குற்றுயிர் ஆக வேணும்
நெஞ்சினில் நிலைத்து நிற்க
        நெளிவதும் சொல்லத்தான் வேண்டும்!
மிஞ்சிய எல்லாம்கொல்லும்
        நஞ்செனச் சொல்லி நின்றேன்!

இதுவரை சொன்னதெல்லாம்
        ஏக்கமாயக் கேட்டிருந்து
பதுமையாய் நின்றதம்மா!
        பார்புகழ்க் காதல் ஜோடி!
மதியெலாம் நொந்து தங்கள்
        மனமெலாம் வெந்து, பின்னர்,
‘இதுஎன்ன காதல்! இந்த
        இழிநிலை காதல் அல்ல!

உடல்வெறிக்காமம் ஆகும்!
        உயர்வுடன், காதல் பற்றி
மடல் பல எழுத வந்தோம்:
        மாணவர் வாழ்வில் காதல்
‘கெடல்’ எனும் நிலைக்குப் பாதை
        கேட்பதாம் என்று. கண்ணீர்
கடல் எனப் பெருக்கிச் சொல்லிக்
        கலங்கியே மறைந்து விட்டார்!
-------------

இளமைச் சிறகு

(கல்லூரிப் படிப்பை முடித்த நேரம், எதிர்காலத்தைப் பற்றிய எதிர்பார்ப்புகளின்
இனம் புரியாத கலக்கம் நெஞ்சைக் கவ்வ, உறவு வல்லூறுகளின்
உதவியை எதிர்பார்த்து ஏங்கிச் சலித்து எழுதிய கவிதை.)

ஏங்காமல் ஏங்குவதும், விடியும் வேளை
        எந்நாளோ எனப்புலம்பும் எண்ணம் தன்னைத்
தாங்காமல் தவிப்பதுவும் தனிமை தேடித்
        தளர்கின்;ற நெஞ்சோடு பேசித் தேற்றித்
தூங்காத விழிகளிலே துயரின் ஆழம்;
        துல்லிதமாய்த் தெரிவதைத்தான் மாற்றுதற்கு
வாங்காத புன்னகையை வலிய வாங்கி
        வலம் வரவா இளம் நெஞ்சில் ஆசை தந்தாய்?

சூழுவதே சுற்றமென்றார்; என்னைச் சூழச்
        சோகமன்றி உறவேதும் இல்லை தேவா!
வாழுகின்ற நேரத்தில் வந்து மொய்க்கும்
        வல்லூறு காக்கைகளைத் தேடித் தேடி
தாழவானில் சிறகடிக்கும் மனத்தில் பட்ட
        தழும்புகளை எண்ணிடவா இளமை தந்தாய்?
பாழும் வீண் ஆசைகளைச் சப்புக் கொட்டிப்
        பார்த்திருக்கவா எனக்குக் கண்கள் தந்தாய்!
--------

விசும்பல்

நெஞ்சமே, கொஞ்சம் உறங்கிவிடு ! – அந்த
நினைவுகள் நம்மை விழுங்கிவிடு!

        அன்புக் கனிகள்
        அழுகிய துயர்கள்
        துன்பக் கண்ணீர்
        தூர்ந்திடும் விழிகள்
        பாசம், வறட்சிப்
        பாலையின் வழிகள்
        மோசக் காதல்
        முறிந்ததன் பொறிகள்

இத்தனை எலும்புகள் தொண்டையில் சிக்கின – சைவனின்
அத்தனை புலன்களும் விரக்தியைக் கக்கின
        நெஞ்சமே கொஞ்சம் உறங்கிவிடு – அந்த
        நினைவுகள் தம்மை விழுங்கிவிடு!

        அழுந்தத் துடிக்கும்
        அனுபவச் சுவைகள்
        அழகின் சதையில்
        அரைகுறை விழுங்கல்
        கழுத்தை நெறிக்கும்
        கடமையின் சுமைகள்
        கனவு, துணைக்காய்க்
        கசியும் விசும்பல் !

ஊமையின் கனவினில் ஆயிரம் நாடகம் - இது
ஒவ்வொரு மனிதனும் ஊறிடும் காவியம் !

        நெஞ்சமே கொஞ்சம் உறங்கிவிடு – அந்த
        நினைவுகள் தம்மை விழுங்கிவிடு!
---------------------

பெண்மையைப் பாடு மனமே!

சிருங்கார ரசம் சொட்டும் சேல்விழிகள் கதை பேசும்
        சேதிபல சொன்னால் இனிக்கும்
அருங்காதல் மலர் உதட்டில் மதுநிரம்பி வழிகின்ற
        அழகுதானே உள்ளம் சுவைக்கும்?
பருந்தோளும் திண்மார்பும் படைத்தமத யானைகளைப்
        பாடிமிக அலுத்த மனமே,
விருந்தாக எழில்மான்கள் நவரசமாய்ச் சுவை நல்கும்
        விதம் பாடி மகிழ்க தினமே!

வதம் செய்யும் வெயில் பாடி இளநங்கை மடியில் கண்
        வளர்கின்ற நிழலை மறந்தாய்
குதி போட்டு வரும் ஆற்றைக் கவியெழுதி, சலசலத்துக்
        குளிர்கின்ற அருவி துறந்தாய்
கொதிக்கின்ற கொடுமைகளைக் குதறுகிற ஆற்றலினைக்
        கூறிமிக அலுத்த மனமே,
இதமான நினைவுகளில் அளவிடவே அரியபெண்கள்
        எழில் நெஞ்சம் பாடு தினமே!

உறுதிமிகும் வைரமுள்ள மரம் பாடி நளின முடன்
        ஓசியும் பூங் கொடியை மறந்தாய்
இறுதிதரும் புயல் பாடி இளநெஞ்சைத் தழுவவரும்
        இனியதென்றல் மாண்பு துறந்தாய்
வறிதாக வெறும் கட்டைக் குரல் சேவல் தனைப்பாடி
        வாயெல்லாம் சலித்த மனமே
அறியாமல் நமைக்கவர அழைக்கின்ற பெண்குயிலின்
        அமுத இசை பாடு தினமே!

படைக்கலங்கள் கரத்தேந்திப் பகையழிக்கும் கடவுளரைப்
        பாடாமல், கனிவு கருணை
அடைக்கலமாய் இடைநெளியும் ஒயிலான தேவியரை
        அணுகி இனி அமைதி பெறுவேன்!
கொடிமாதர் மயில்களுடன் கொஞ்சுவதே சுகமென்று
        கூசாமல் பாடு மனமே,
அடிநோகும் புதுமலர்கள் அவைதேடிச் சுவைகண்டு
        ரீங்காரம் பாடு தினமே!
----------

சேரத்துப் பைங்கிளிகள் !

முற்றாத மேன்மாடம் மூடாமல் பட்டகண்கள்
        மொய்த்திருந்து விட்டகலத் தாம் மறுக்க
சிற்றாடை வட்டாடும் செந்தூர மாங்கனிகள்
        தொட்டேனும் பார்க்கநெஞ்சம் தான் துடிக்க

        கடைந்தெடுத்த நேர்த்தியெனக்
        கவர்ந்திழுக்கும் பொற் சிலைகள் - மனங்
        கமழ்கின்ற பொன்மலர்கள்!

நெற்றியிலே கீற்றாகத் திருநீறும் குங்குமமும்
        நிறைகுடமாய் அழகோடு பளபளக்க
சுற்றியுள்ள வெண்பட்டுச் சரிகையுடை புனிதமான
        தூய்மைக்கே இலக்கியமாய்த் துறுதுறுக்க,

        தெய்வீகப் பேரழகில்
        திணறடிக்கும் பூங்கொடிகள் - தந்தத்
        தேரசையும் பூம்பொழில்கள்!

தோணியிலே சேரநாட்டுத் தோகையிளம் பெண்நிலவைத்
        துய்ப்பதற்குப் பாரதியே கனவு காண,
பூணு(ம்)அணி பலவகையால் போலிஎழில் கொள்ளாமல்
        புதுமலராய் இயற்கைஎழில் கொண்டுநாணும்

        செவ்வாயில் மிழற்றுகிற
        சேரத்துப் பைங்கிளிகள் - தவழும்
        கேரளத்து வான்முகில்கள்!

சீறிவரும் ஆண்மணமும் சிலநொடியில் தஞ்சமிடச்
        சிறகடிக்கும் கருவிழிகள் படபடக்க,
ஆறாமல் பெற்றாலும் அழகேதும் வற்றாமல்
        அருவியென ஒசிந்துவரும் நடைசிறக்க

        வேற்றுநாட்டு மங்கையரை
        வேம்பாக்கும் தீங்கனிகள் - சுவை
        வீழ்த்துகிற தேன்துளிகள்!
----------

கனியாத கனவுகள் !

        தேவன் அழைப்பானா? – எனக்கொரு
        தேதி குறிப்பானா? - இந்தப்
        பாவி துடிப்பதையே - இன்னும்
        பார்த்து ரசிப்பானா?

புயல்வளைத்த குடிசையிலே
        புரையோடிக் கிடந்தவனை அரசிமார்பில்
துயில் கொள்ளும் இதம்வைத்துத்
        துளிர்விட்ட ஆசைகளின் உயிர்பறித்தான்!

துறவுக்குத் தொடக்கவிழா
        துயிலாத விரக்தியிலே நிலா நடத்த
உறவுக்குத் தொடக்க விழா
        உடன் நடத்தி முகில் மூடிக் கதை முடித்தான்

சுடர்விட்ட காதலுக்குச்
        சுதிகூடப்; பக்கமேளம் கொட்டிவிட்டு
கடைவிரிக்க நிழல் காட்டிக்
        கடைசியிலே கடும்வெயிலில் துடிக்கவிட்டான்!

முள்தைத்த நெஞ்சத்தின்
        முக்காட்டில் தான் திரிந்த வேதனையைக்
கள் வைத்த செவ்விதழில்
        கரைப்பதற்கு வழிகாட்டிக் கதறவிட்டான்!

மலர் விழியாம் திறவு கோல்கள்
        மனந்திறக்க இருநெஞ்சம் கலக்கவிட்டு
இலைவிரித்த ஜாடைகளில்
        ஏக்கத்தை மோகத்தை முடுக்கிவிட்டான்!

முகமென்ற முழுமதியை
        முழு நேரம் நெஞ்சத்தில் தவழவிட்டுப்
புகவந்த பூக்காட்டின்
        புதுமணத்தை வழிமாறிப் போகவிட்டான்! – அந்தத்

        தேவன் அழைப்பானா? – எனக்கொரு
        தேதி குறிப்பானா? - இந்தப்
        பாவி துடிப்பதையே - இன்னும்
        பார்த்து ரசிப்பானா?
-----------

மறுபடியும் தேடுகிறேன்

(காதல் - நிதர்சனமான பொய் என்று நிச்சயமாகத் தெரிந்தும்
அந்த மாயையில் அலையுதே மனம்)

காதலென்று கோட்டை கட்டிக்
        கண்டதெல்லாம் கோட்டை விட்டு
மாதவளின் பிரிவினிலே
        மனம் நொந்து பாடங்கற்று

வஞ்சியர்கள் எல்லோரும்
        வஞ்சகியர் என்றுணர்ந்தும்
மிஞ்சியுள்ள ஆசையிலே
        மேலுமொரு முறைதவற

        மறுபடியும் தேடுகிறேன் - “அதில்”
        மதிகிறங்கி ஓடுகிறேன்.

வெந்த புண்ணில் நினைவுகளால்
        வேல் கொண்டு பாய்ச்சுகிற
இந்தமன அரக்கனிடம்
        இருந்தே தான் தப்பிக்க,

மதுவென்ற விலைமகளை
        மயக்கிவைக்க அனுப்பிவைத்தேன்!
அது, முடிந்து போதையெல்லாம்
        ஆனபின்போ பழையகதை!

        மறுபடியும் தேடுகிறேன் - “அதில்”
        மதிகிறங்கி ஓடுகிறேன்.
----------------

அவளுக்கோ நெஞ்சம் இல்லை!

ஓராயிரம் ஓராயிரம் உள்ளக்கடல் ஓசைகள்!
        அலையாடின, கவிபாடின அவள்மீதெழும் ஆசைகள்!
போராடின பூச்சூடின : பருவக்கணை லீலையில்
        பூமாதுடன் நான் ஆடிடக் காதல்எனும் சோலையில்

        மனக்கோட்டை கட்டிவிட்டேன்
        மாளிகையில் ராணியில்லை!
சலிப்பாகினேன் களைப்பாகினேன் : உலகத்துயர் வேர்வையில்
        முழுக்காடினேன்; அலைமோதினேன் ; மூச்சாறிட யாருமே
அழைப்பாரிலை; பரிவோடெனை அணைப்பாரிலை; நெஞ்சிலே
        துயர்ப்பாட்டையே தினம் பாடினேன் சுகந்தத்தைக் கொஞ்சிட

        மனக்கதவு திறந்துவைத்தேன்
        மலர்த்தென்றல் குலவவில்லை
தூங்காமலே உருண்டோடிடும் வேம்பாகிய இரவுகள்
தேம்பாமலே மனம்வெம்பிடத் திசைமாற்றிய உறவுகள்!
நீங்காமலே பாம்பாகியே நெளிந்தாடிடும் நினைவுகள்
ஏங்காமலே உயிர் போக்கிடும் எனைத்தாக்கிடும் கனவுகள்

        ஆசைகளோ கொஞ்சமில்லை !
        அவளுக்கோ நெஞ்சமில்லை
---------

ஒரு நாள் ….. ஒரு பொழுது !


புதுப்புடவை தான் உடுத்திப்
        போதைதரும் பேரழகில்
பதுமையென நடை நடந்து
        பவனிவரும் பூந்தேரே!

கவனத்தைச் சிதறடித்துக்
        கனவுகளை வளரவிட்டுத்,
தவம் செய்தும் அடைவதென்ற
        தாகத்தைத் தருபவளே !

கன்னக் கதுப்புகளில்
        கவியெழுதிப் பார்த்திருந்து
சின்ன இடைவளைத்துச்
        சிறைப்படுத்தி மெய்முகர்ந்து

ஒருநாள் - ஒரே ஒருநாள்
        உன்னோடு வாழ்ந்துவிட்டால்
வருவதெல்லாம் வரட்டும் ! என்
        வாழ்நாளே முடியட்டும்!
-------

மலரா? மயிலா?

        மகளிர் என்றாலே மலர்கள் - இளம்
        மனதில் வந்தாடும் மயில்கள் !

முழுமை பெற்றன செழுமை உற்றன
        மூழ்கிட இளமை நதிகள் அழைத்தன !
அழகின் அரங்கில் அபிநயம் காட்டின
        ஆசையின மூச்சில் இன்பம் உயிர்த்தன !
       
        மகளிர் என்றாலே மலர்கள் - இளம்
        மனதில் வந்தாடும் மயில்கள் !

கண்கள் துளைத்தன காண அழைத்தன
        கார்முகில் தொடங்கிக் கால்வரை மலைத்தன
பெண்மைப் பூக்கள் வண்ணம் இழுத்தன
        பேதையர் துகிலின் உரசல் வெறித்தன

        மகளிர் என்றாலே மலர்கள் - இளம்
        மனதில் வந்தாடும் மயில்கள் !
உடலின் மென்மணம் உணர்வு மயங்கும்
        ஓரம் நெருங்கினும் பொறிகள் கலங்கும்
கடலின் ஆழம் கனவுக் கூட்டம்
        கரைகள் தோறும் மீன்கள் கொட்டம்

        மகளிர் என்றாலே மலர்கள் - இளம்
        மனதில் வந்தாடும் மயில்கள் !
--------------------

நாளை மணநாள் !

(விடிந்தால் - அவனுக்கும் அவளுக்கும் திருமணம்.
அதுகாலம் வரை ஆக்கப் பொறுத்த அவன் நெஞ்சம் ஆறப் பொறுக்கவில்லை.
அவளை நினைந்து அரற்றுகிறான், கேளுங்கள்)

என் போல நீகிடந்து துடிக்கின் றாயோ?
        இல்லை, வளர் கனவேறிப் பறக்கின் றாயோ?
இன்பத்தை மொத்தமாக அள்ளி நாளை
        என்கையில் தரப்போகும் பூவே ! தேனே !

        இத்தனை நாள் பொறுத்திருந்த இந்த நெஞ்சம் - அந்த
        ஏக்கத்தில் தீர்க்குதடி இன்று வஞ்சம்
உரிமையுடன் மேனிக்கு உறவு சொல்ல
        ஊதுபத்தி மணக்கின்ற அறையின் உள்ளே
பொறுமைக்கும் ஆடைக்கும் துறவு சொல்லிப்
        புலர்கின்ற பொழுது வெட்கம் வரவு சொல்ல

        ஒருநாளே பொறுப்பதற்கு மறுக்கும் நெஞ்சம் - என்
        உயிரே, உன் நிழற்படத்தில் உருகிக் கெஞ்சும் !
நாளை, உன்கணவனென ஆகப் போகும்
        நானின்று துடிதுடிப்பேன் என்றே இந்த
வேளை, நீ ஓடிவந்து வேது வைக்க
        வேண்டாமோ? ஆடி, இரு நான் உன்னை நாளை……..

        கணைபட்டுத் துடிக்குதடி இந்த நெஞ்சம் - இன்றே
        கடைக்கண்ணைக் காட்டிவிட்டால் என்ன கொஞ்சம்?
----------

வசந்தம் எரிகிறது

மறவாத முகம்தந்த கனிவு – அதில்
மணக்கின்ற பருவத்துத் கனவு

        கனவு, கனவு, கனவு ….. - சொர்க்கக்
        கதவுகளின் கள்ளச் சாவி!
சுவைதேங்கும் பள்ளிகளின் படிப்பு – அதில்
துயிலாத இரவுகளின் விழிப்பு

        விழிப்பு, விழிப்பு, விழிப்பு …… - நரம்பறுந்த
        வீணைகளின் மாய நாதம்!
பனிதூங்கும் புதுமலரில் லயிப்பு – அதில்
பறிக்கிறது உயிரை, என் நினைப்பு

        நினைப்பு, நினைப்பு, நினைப்பு …….. – என்
        நிம்மதிக்குச் சமாதி யாக!
சங்கமிக்கும் ஆறுகளின் சிலிர்ப்பு, - அதில்
சதிராடும் நீர்க்குமிழிச் சிரிப்பு

        சிரிப்பு, சிரிப்பு, சிரிப்பு…….. – மனம்
        சிறகடிக்கும் சப்தம் ராகம்!
பூரிப்புப் புதிர்போடும் வனப்பு, - எல்லாம்
புரியாத இளநெஞ்சின் தவிப்பு

        தவிப்பு, தவிப்பு, தவிப்பு …….. – வசந்தம்
        தகிக்கின்ற நிலைக்குச் சாட்சி!
-------------

விருந்து

மாலையில் குளுமையிலே மதிமயக்க
        மங்கையவள் விருந்துக்கு வந்தாள் ஓர் நாள்!
பாலைமணற் பரப்பினிலே வெயிலிற் சோர்ந்து
        பசியோடு காத்திருந்தேன், விருந்தாய் வந்த
சோலைவனம் என்நெஞ்சில் சொர்க்க போகச்
        சுகந்தமெல்லாம் பொழிந்துவிட்டாள் சிறிதுபோழ்தில்
கோலஎழில் உறவினரும் எனக்குஉண்டென்று
        கொஞ்சமும் நான் கண்டதில்லை இதுநாள் மட்டும்!

விழியிரண்டும் சுழல்கின்ற வேகம், முன்னோன்
        விஜயநகர் விசுவநாதன் வாளின் வீச்சு!
பழிகாரி ! என்இதயம் தன்னைத் தாக்கிப்
        பாய்கின்ற விழிவேலால் பெயர்த்தெடுத்து
விழித்தவிழி மூடும்முன் முந்தானையின்
        விரிப்புக்குள் வைத்தெடுத்துப் போனாள்! மோகச்
சுழியினிலே வீழ்ந்துவிட்டு நிழலாய் நிற்கும்
        சொர்க்கத்தைத் தேடுகிறேன்! காண்ப(து) எந்நாள்?

கொள்ளை எழில் சொல்லுவதா? கொஞ்சும் அன்புக்
        குணாதிசயம் சொல்லுவதா? மேனி யெங்கும்
துள்ளுகின்ற மதர்ப்பினைத்தான் சொல்லிச் சொல்லித்
        துவளுவதா? போய்வருவேன் என்று சொல்லி
அள்ளுகின்ற நடையில் ஓர் பார்வை பார்த்து
        அளந்தாளே அழகெல்லாம், அந்த வேளை
கள்ளுண்ட போதையெனும் தன்மை தன்னைக்
        கண்டதைத்தான் சொல்லிடவா? அம்மம்மாவோ?

ஆயிரமாய் அர்த்தங்கள் புதைந்திருக்கும்
        ஆழமான பார்வைகளில் அன்பு சேர
மாயவலை பின்னுகின்ற இதழ் இரண்டில்
        மதி பொழியும் பாலமுதம் கனிந்தே ஊற,
கோயிற்பூங் கலசங்கள் சொல்லும் கோடிக்
        குறுகுறுப்புக் கதைகளிலே ஆசை மீற,
தூயவளின் நினைவினிலே துடிக்கும் ஏழை
        தூங்காமல் கிடப்ப(து) எந்த விதம்தான் கூற?
---------

ஆணையிடு !

இத்தனை குடம் சுமந்தால் - உன்
        இடை நொந்து போகாதா? – நீ
இத்தனை நடை நடந்தால்
        என் உள்ளம் நோகாதா?

ஊர்ப்புறத்துத் தோப்பருகே
        ஊருணியில் உன் சலங்கை
நீர்ப்பரப்பை முத்தமிட்டால் - என்
        நெஞ்சிலெங்கோ மொட்டு அவிழும்!

கலைநயமாயக் குனிந்திருந்து
        கையாலே நீர்தள்ளி -
அலையாலே உன் உருவை – நீ
        அழித்தாலும் என்நெஞ்சில்

நிலையாக இருக்கின்ற – உன்
        நிலாமுகத்தைக் கலைப்பதெங்கே? - இதில்
சிலையாகி லயித்து நின்றால் - உன்
        சிரிப்பென்னை இழுப்பதெங்கே?

உன் சிரிப்பில் உதிர்ந்திட்ட
        ஒளிமுத்துக் கிடைக்கு மென்று
கண்சிவக்கு மட்டும் நான் - நீந்திக்
        கை சோர்ந்து கரை சேர்ந்தேன்!

உன் விழிகள் ஆணையிட்டால்
        உன் அதரம் அசைந்து விட்டால்
உன் வீட்டு வாசலுக்கே
        ஊருணியை நான் கொணர்வேன்!

இத்தனை குடம் சுமந்தால் - உன்
        இடை நொந்து போகாதா – நீ
இத்தனை நடை நடந்தால்
        என்உள்ளம் நோகாதா?
------------

பலவீனங்கள்

ஈனத்தில் உயிர்ப்பித்த என்உடம்பின்
        எத்தனையோ ஈனங்கள் போதாதென்று
மானத்தைப் புதைப்பதற்கோ மாது தேடும்
        மதீயீனப் பலவீனம் வைத்தாய் தேவா?
ஞானத்தை இருளாக்கி இச்சை என்ற
        நாசத்தில் எரிகின்றேன்: சதை நினைக்கும்
ஊனத்தைக் கிள்ளிவிட்டுத் தாலாட்டாமல்
        உறங்கிவிடச் சொன்னால் நான் என்ன செய்ய?

போகத்தில் வாழஎண்ணும் கவிதை நெஞ்சைப்
        புண்ணாக்கும் முள்மஞ்சத் திட்டாய்! அந்த
சோகத்தில் நானூறிக் கிடப்பதற்கும்
        சுதந்திரத்தைத் தந்தாயா? அரவணைப்பின்
தாகத்தில் - இதம் காணும் பூஞ்சை ஆசைத்
        தாலாட்டில் தறிகெடவும் வைத்தாய்: ஆடும்
நாகத்தை உடன்வைத்துத் தவிப்பினோடு
        நல்லபடி தூங்கென்றால் என்ன செய்ய?
-------

களங்கம் !

சூழல்விரித்தவலை சொந்தஉடல் வைத்தஉலை
        சோர மனங்களுக்கோ சுவைத்தல் கைவந்தகலை
பாழும் உடல்எனக்குப் பாறைபோல் கனத்திருக்க – நான்
        பாலைவனமான பத்தினிக்கு வைத்தசிலை

வேட்டை நாய்குதறி வெட்டவெளி ஆக்கிப் பின்
        வீழ்த்தித் தெருப்புழுதி வெறித்தனத்தில் பார்த்தசுவை
கூட்டிக் கழித்தகதை! குளித்துத்தான் இருந்தாலும்
        கொட்டிக் கவிழ்த்ததணல் கொதிப்புத்தான் தீருதில்லை
----------

இன்ப வேதனை!

கசங்கியுள்ள பஞ்சணை மேல் காத லெனும் தீயாலே
பொசுங்கிக் கிடக்கின்ற பூச்சரமே! மல்லிகையே!

தத்துநடைக் கால்கள் தடுமாறிப் பின்னலிடப்
புத்தாடை கிசுகிசுத்துப் புரியவைக்கும் மந்திரத்தில்
மயக்கத்தில் இன்பவெட்கத் தயக்கத்தில் - முதலிரவின்
இயக்கத்தில் - இரவலாக எண்ணங்கள் தந்துவிட்ட

மணமகளைத் தழுவி’ அவள் மார்பினையும் தோளினையும்
மணமகனும் காணாமுன் மல்லிகையே நீ அணைத்தாய்!
கொடி, அவளின் உச்சியிலே குலைவிரித்து உறவுக்குக்
கொடிபிடித்துக் காமனெனும்! கொடியவனின் கணைகளுக்குக்

குடி இருக்க இடம் தந்த கோமளமே! தோழியர்கள்
வெடிச்சிரிப்பை உதிர்த்து வேடிக்கை செய்துநிற்க,
மல்லிகையுன் பாரமோடு மாண்புடைய நாணமும்
கொல்லாமல் கொல்லமுகக் குடைசாய்த்த மணமகளைக்

கூசும் நிலையறிந்து கூடித் தள்ளிசொர்க்க
வாசல் வரைகொணர்ந்து வழியனுப்பி நின்றிடுவோர்
கன்னியர் பல்வரிசை காட்டும் உனைமட்டும்
இன்பக் கதை கேட்க, ஏந்திழையாள் படும்பாட்டின்

காட்சி யெல்லாம் கண்டுவந்து காலையிலே கேலிசெய்ய
சாட்சிக்கு அனுப்பி விட்டார்! சரமாக நீ சென்றாய்!
அணைத்தான் மணமகன், அண்ணல்கை வண்ணத்தில்
இணைத்திருந்த சரம்விட்டு இறங்கிப் பஞ்சனை மேல்
ஓடி விளையாடி உதிர்ந்திருப்பாய்! பாவம் நீ!
“கோடிக் கதையெல்லாம் கூசாமல் பேசிவிட்டோம்
இந்த மல்லிகையாள் இருந்தால் நம்கதையைச்
சிந்துபாடி ஊர்முழுக்கச் சிரிக்க வன்றோ வைத்திடுவாள்

என்று நினைத்தாரோஎன்னவோ? உன்னை
இன்ப மூச்சுகள் எழுப்பிய வெம்மையில்
நொந்து கருகி நோகவைத்தார்! அய்யோ நீ
எந்தநிலை வேதனைகள் இரவெல்லாம் பட்டாயோ!

மாற்றார் துய்த்திருக்க மணம் தந்து கெடும் - தியாக
ஊற்றே! உன் பொன்றோர் உலகில் எப்போதும்
இருப்பார் போலும்! இன்று வதங்கிவிட்ட
திருமலரே! மோகத்தின் தேனூற்றே

உன்குலம் எத்தனை உலக வரலாற்றில்
இன்பப் பஞ்சணையில் இன்னல்கள் பட்டதுவோ?
எத்தனை நளின எழிலரசி மார்கள்
சித்தாடப் பாய்விரித்துச் செத்தாயோ பூவரசி

இனிய மலர்உனது இன்ப வேதனை
நினைந்தே உருகினேன்! நின்புகழ் வாழ்கவே!
----------

நெஞ்சில் ஒரு விலங்கு

நானாக நான் இருக்கும் வரையில் தான்,
        கலை நெஞ்சம் உடல் அழகைக்
        கனிவோடு சுவைக்கும் - கலைமான், நிலை
குலையாமல் இருக்கும்! – விலங்குமனம்,
        புலையனென உடல் வெறியில்
        பொறி கலங்கிப் பாய்ந்தால் - எச்சில்
அலைப்பட்டு, விலைப்பட்டு
        அது தெருவில் கிடக்கும் - விதி அதன்
        முதுகேறி நடக்கும்!

நானாக நானிருக்கும் வரையில் தான்
        இதழ் விரித்த பனிமலரில்
        என் நெஞ்சம் லயிக்கும் - மலரும்
இதமாகச் சிரிக்கும்!- விலங்குமனம்
        இறுக்கியகை தளர்த்தி விட்டு
        வெறி குறைந்து நின்றால் - இளமை
முறுவலித்த மலர்கசங்கிக்
        காலடியில் கிடக்கும் - விதி அதைக்
        கேலி கொட்டி நடக்கும்!
--------

இனி உனக்காவே தான்

வானவெளித் தாரகைகள்
        வார்த்தஒளித் தூரிகைபோல் - உன்
மோனவிழி, ஆயிரமாய்
        மோகநிலை தீட்டுகையில்,

        இனி உனக் காகவே தான் -
        தினம் உனைக்காணவே நான்
        எழுதுவேன் ஒரு கோடி
        இலக்கியம் என்தேவி! – நீ

தாகமழை தேடும் நிலம்
        தாவுகயல் வீழும்வலை! உன்
தேகஎழில் ஞானஉலை
        தேவதைகள் சூடுமலர்!

        இனி உனக் காகவேதான்
        தினம் உனைக் காணவேநான்
        எழுதுவேன் ஒருகோடி
        இலக்கியம் என்தேவி! – உன்

ஈரஇதழ் ஆசைவயல்
        ஏழபிறப் பாக உயில்! – நீ
மாரன் விடும் மூச்சின் இழை – கவி
        வாசல் என்றன் பாட்டின் உயிர்!

        இனிஉனக் காகவேதான்,
        தினம் உனைக் காணவே நான்
        எழுதுவேன் ஒருகோடி
        இலக்கியம் என்தேவி!
----------------

சாதிக்க நினைத்தேன்
(விதியின் வீதியில் வேதனை ஒன்றையே வலைபோட்டுத் தேடினேன்.
விலை போட்டு வாங்கினேன் இறைவா:)

சாதிக்க நினைத்தேன் - நீயோ
சோதிக்க நினைத்தாய்!

        வீதிக்குக் கொணர்ந்தாய்
        விதியாலே மோதி - இன்னும்
        போதிக்க நினைத்தால்
        போகும் உன் நீதி!

சாதிக்க நினைத்தேன் - நீயோ
போதிக்க நினைத்தாய்!

        கிளையிலிருந்த
        கிளிகளைப் பிரித்தாய் - என்
        விளைநிலம் முழுதும்
        வேதனை விதைத்தாய்!

சாதிக்க நினைத்தேன் - நீயோ
ஆதிக்கம் நினைத்தாய்!

        சோலையில் இருந்து
        சுகம் பெற நினைத்தேன் - என்னைப்
        பாலையில் சேர்க்கப்
        பாதையில் முளைத்தாய்!

சாதிக்க நினைத்தேன் - நீயோ
பாதிக்க வளைத்தாய்!
--------------

கணக்கு வழக்கு
(கணக்குப் பாடம் பயில ஏட்டை எடுத்த போதெல்லாம் கவிதையே எழுதினேன்)
கணக்கோடு போராடக் களத்தில் இறங்கினேன்
கணக்காக என் இறைவன் கவிதையிலே செலுத்திவிட்டான்!

        ஏட்டுக் கணக்குத் தவறவில்லை - இதய
        ஏட்டுக் கணக்கே வழுக்கியது!
        கூட்டல் கணக்குத் தவறவில்லை – உறவின்
        கூட்டல் கணக்குச் சறுக்கியது !

        வகுத்தல் கணக்குத் தவறவில்லை – பாதை
        வகுத்த கணக்கே தவறியது!

        கழித்தல் கணக்கில் பிழையில்லை – நாளைக்
        கழித்த கணக்கில் பிழையுண்டு!

        பெருக்கல் கணக்கோ முடிகிறது – நட்பைப்
        பெருக்க நினைத்தேன் ; முடியவில்லை;

        நான் போட நினைத்ததொரு கணக்கு – அந்த
        நாயகனின் கணக்கோ புதுச்சரக்கு!
---------


This file was last updated on 9 Sept. 2018.
Feel free to send the corrections to the .